Wednesday, March 13, 2024

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

 

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி

வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது

தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி கேட்ட கேள்விகளுக்கு என் பதில்கள். தமிழோவியம் தீபாவளி மலரில் வெளியானது. இங்கே ஆவணப்படுத்தலுக்காக.

 1. 'தமிழ்மணம்' செயலாக்கும் திட்டம் எவ்வாறு உதித்தது? எந்த  இணையத்தளத்தையாவது முன்மாதிரியாக வைத்துக் கொண்டீர்களா? செயலாக்க  எவ்வளவு நேரம் பிடித்தது? தங்கள் அனுபவங்களைப் பகிரமுடியுமா?

உண்மையில் இப்போது நீங்கள் பார்க்கும் வடிவம் என் மனதில் உருவாகி ஆறுமாதத்துக்கு மேல் ஆகிறது. ஒரு சில நண்பர்களிடம் என் கற்பனையை கதைச்சுருக்கமாய் எழுதியும் காட்டியிருந்தேன். ஆனால் அந்தக் கதையை நானே படமாக எடுப்பேன் என்று அப்போது தெரியாது. அப்படி மனதில் தோன்றியதில் ஒரு சிறு பகுதியை மட்டும் செய்யலாம் என்று ஜூலை மாதத்தில், ஒரு ஓரமாய் ஆரம்பித்தேன். அதுவும், தமிழ்வலைப்பதிவுகளின் பட்டியல் ஒன்று இருக்கிறதல்லவா, அதை எளிதாய் நிர்வகிக்கவும், அதிலிருந்து அவரவர் தங்கள் விருப்பமான திரட்டியில் (ப்ளாக்லைன்ஸ், ஷார்ப்ரீடர் போன்றவை) சேர்த்துக்கொள்ள ஒரு OPML தொகுப்பு வருமாறும் செய்ய மட்டுமே நான் ஆசைப்பட்டேன். இதுவே ஒரு கல்லூரிமாணவர் 'ப்ராஜக்ட் ஒர்க்' என்று இறுதியாண்டில் செய்வாரே, அதே கோணத்தில்தான் செய்ய ஆரம்பித்தேன்.

நியூக்ளியஸ் வலைப்பதிவு மென்கலனை தமிழாக்கம் செய்ய முயன்றதில், தரவுத்தளத்துடன் இணைந்த இயங்கு-வலைப்பக்கங்கள் அவற்றின் ஆற்றல் ஆகியவற்றை கொஞ்சம் உணர்ந்து இந்த வகை மென்கலனிலும் என் அறிவை வளர்த்துக்கொள்ள இந்த திட்டம் கைக்கொடுக்கும் என்றும் எண்ணினேன்.

பெரிதாக ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தை முன்மாதிரியாக சொல்லமுடியாது. இங்கே, அமெரிக்காவில் இருக்கும் இணைய வசதி, கிடைக்கும் நேரம் ஆகியவற்றால் இணையத்தில் மணிக்கணக்காக உலாவுவது என் முக்கியப் பொழுதுபோக்கு. அதிலிருந்து இணையத்தளங்களின் சாத்தியங்கள், வடிவங்கள் பற்றி நிறைய அவதானித்திருக்கிறேன். அவை என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் இந்தத் தளத்தில் இருக்கும். கூகிளின் மானுடம், அமேசானின் வீச்சும் அடர்வும், இன்னும் பல தளங்களின் சில சிறப்பியல்புகள் மனத்தைக் கவர்ந்தவை. அவற்றைப் பார்த்து கட்டிய பொம்மைவீடுதான் இந்த முயற்சி.

முதன்முதலில் நான் தளத்தை வெளியிட்டபோது எனக்கு 6 வாரங்கள் பிடித்தன. அதில் சுமார் 100 மணிநேர உழைப்பு (கற்றுக்குட்டி கற்றுக்கொள்ள ஆகும் காலம், தொழில்முறையில் எழுதுபவருக்கு பாதிநேரத்தில் முடிந்திருக்குமோ என்னவோ) இருக்கும். அப்போது நான் வலைப்பதிவில் எழுதுவதையும் நிறுத்திவைத்துவிட்டேன். இன்னும் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே புதிய வசதிகளை ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கிறேன்.

 2. தினம் ஒரு புது வலைப்பதிவு வரும் இந்த காலகட்டத்தில், தமிழ்மணம்  பல்வேறு பதிவுகளையும் உடனடியாக வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறது.  ஆனால், நாளடைவில் பல்லாயிரக்கணக்காய், தமிழ்ப்பதிவுகள் பல்கிப்  பெருகிய காலத்தில் (அடுத்த வருடம்? , தமிழ்மணம் நீர்த்துப் போகும்  அபாயம் இருக்கிறதா? அப்படி ஒரு நாள் வரும் பட்சத்தில், தமிழ்மணத்தில்  காணக் கிடைக்கும், புதிய பதிவுப் பட்டியல்களும், யாஹ¥ குழுமங்களில் இருக்கும்  மடல் பட்டியல்களும், எவ்வாறு மாறுபடும்?

'நீர்த்துப்போக' என்பதன் முழு அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. ஆனாலும் தமிழ்மணம் போன்று புதிய தளங்கள் அதைவிட மேம்பட்ட ஆற்றல்களுடன் உருவாக வாய்ப்பிருக்கிறது என்பது என் நம்பிக்கை. எண்ணிக்கை அதிகரிக்கும்போது இன்று இருப்பதைப் போலல்லாமல் கருத்தொற்றுமை, கருப்பொருள், அரசியல், போன்ற காரணங்களால் பல குழுக்களாகவும் வலைப்பதிவுகள் குழுமவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது தமிழ்மணம் மட்டுமில்லை, எந்த ஒரு ஒற்றைத்தளமும் வலைப்பதிவுகள் முழுமைக்கும் ஒரே வாசலாக இருக்கமுடியாது, இருந்தாலும் அது பரவலான சுதந்திரமான வளர்ச்சிக்கு வழிவகுக்காது போகவும் வாய்ப்பிருக்கிறது.

யாஹ¥ குழுமங்களில் இருக்கும் மடல்பட்டியல்களுக்கும் வலைப்பதிவுகளுக்கும் இருக்கும் வேறுபாடுகள் கண்கூடானவை. சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. இரண்டும் இருவேறு மட்டத்தில் இயங்குகின்றன. வலைப்பதிவுகள் வராதபோது பலவும் குழுமங்களில் எழுதப்பட்டன. எதுவெல்லாம் குழுமங்களில் எழுதப்படுவதைவிட வலைப்பதிவுகளில் எழுதப்பட்டால் சிறப்பாக இருக்குமோ அவையெல்லாம் ஏற்கனவே வலைப்பதிவுகளாக எழுதப்பட ஆரம்பித்துவிட்டன. இந்த நிலையில் இன்னும் காலம் செல்லச் செல்ல இன்னும் தெளிவு பிறக்கும். அப்போது இந்தக் கேள்வியே தேவையில்லாமல் போய்விடலாம் என்பது என் அனுமானம்.

ஆனால் அதற்காக குழுமங்கள் அழிந்துவிடும் என்று தோன்றவில்லை. சில தொடர் இழைகள் குழுமங்களில் நீளும் அளவுக்கு வலைப்பதிவுகளில் இருக்காமல் போகலாம். குழுமங்கள் ஓரளவுக்கு அறிமுகமான வட்டத்துக்குள் இயங்குவதால் அவற்றில் ஒரு பிணைப்பு, பந்தம் இருக்கும். அதற்காகவும் குழுமங்கள் பேணப்படும். அவற்றில் மடல்களின் எண்ணிக்கை குறையலாம். ஆனால் அவை இருந்துகொண்டுதான் இருக்கும். அவற்றில் சில இன்னும் யுனிகோடைத்தாங்கி html பக்கங்களைக் கையாளும் மன்றவகைகளாக (Forums) பரிணமிக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

 3. தமிழ்மணம் முழுக்க முழுக்க தங்களுடைய ஆர்வத்தினாலும், தமிழ்ப்பதிவர்களை  ஊக்குவிப்பதற்காகவும் உருவானது. அந்த ஈடுபாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்  செல்லும் திட்டங்கள் என்ன?

சொல்லிவிட்டு செய்யாமல் இருப்பதைவிட, சொல்லாமல் விட்டுவிட்டு செய்துவிடுவதே நல்லது இல்லையா? எனவே வசதியும், நேரமும் கைகொடுக்கும் வரை தொடர்ந்து அனைவருக்கும் பயனாகும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டே வரும் என்பதைத்தவிர இப்போது வேறு எதையும் சொல்லமுடியவில்லை.

 4. கூகிள், லீனக்ஸ் போன்றவை பெரும்பாலும் இலவசமாக இருந்தாலும்,  அவற்றைச் சுற்றி பொருளாதாரம் அமைந்திருக்கிறது. தமிழ்மணம் அவ்வாறு பணம்  ஈட்டும் திட்டம் உள்ளதா?

இப்போதைக்கு பணம் ஈட்டும் திட்டம் எதுவும் இல்லை. இதில் அந்த அளவுக்கு வருமானம் வர வாய்ப்பிருகிறதா என்ன, தனிமடலில் சொல்லுங்கள், உங்களை பாகஸ்தராக்கிவிடலாம் தளத்தை நடத்தத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கே பற்றாக்குறை வரும்போது அதை ஈடுகட்டத் தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். தனி ஒருவரின் பொருளையும் நேரத்தையும் இதில் கணக்கில்லாமல் கொட்டமுடியாது அல்லவா (அவர் புரவலரல்லாமல், வெறும் ஆர்வலராக இருக்கும்பட்சத்தில்)

 5. முழுக்க முழுக்க தன்னார்வலர்களின் மூலமே இணையத்தில் தமிழ் வளர்க்க  முடியுமா? லாபநோக்கில் நிறுவனங்கள் எந்தப் பகுதிகளில் ஈடுபட  ஆரம்பிக்கும்? எவ்வாறு?

என் அனுபவத்துக்கு இதெல்லாம் பெரிய பெரிய விஷயங்கள். இடம் மாறிக் கேட்கப்பட்டுவிட்டன.

 6. தங்களுக்கு ஆதர்ச நாயகர்கள் இருக்கிறார்களா? தங்களின் தற்போதைய ரோல்  மாடல் யார்?

அடிப்படையில் நான் ஒரு பொறியாளன். அப்படி சொல்லிக்கொள்வதில் வேறு எப்படி சொல்லிக்கொள்வதையும்விட நிறைவுகாண்பவன். எனவே என் ஆதர்ச நாயகர்கள் பொறியாளர்களே. புகழ்பெற்ற ஹென்றி போர்டில் இருந்து, தாமஸ் ஆல்வ எடிசனிலிருந்து இந்த உலகம் மேம்பட தினமும் உழைக்கும் பெயர் தெரியாத பொறியாளர்கள்வரை எல்லாருமே என் ஆதர்ச நாயகர்கள்தான். குறிப்பாக சொன்னால் கோவையில் நான் முன்பு பணிபுரிந்த நிறுவனத்தலைவர் திரு. ராமசாமி அவர்களைச் சொல்லலாம். அவரிடம் கூடவே இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் தமிழ்மணம் தள வடிவமைப்பு, செயலாக்கம் ஆகியவற்றிலும்கூட வெளிப்பட்டிருக்கின்றன. அவர் மென்கலன் நிறுவனம் நடத்தவில்லை, ஆனால் எந்த பொருள் அல்லது சேவைக்கும் பொதுவான சில குணாதிசயங்கள், எந்த செயல்திட்டத்துக்கும் பொதுவான சில அம்சங்கள் உள்ளன. அவற்றை முடிந்த வரையில் உணர்ந்து செயல்படுத்துவதே பொறியாளனின் முக்கிய பணி.

 7. இணையத்தில் தமிழ் எப்படி இருக்கிறது? படிப்பதற்கு திருப்தியாக  இருக்கிறதா? எந்தத் தளங்களை விரும்புகிறீர்கள்? எங்கு பின்தங்கி  இருக்கிறது?

என் தமிழ் இணைய அனுபவம் ஒருவருடத்துக்கும் சற்று கூடுதல், அவ்வளவே. எனவே இந்த மாதிரிக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி என் அறியாமையைப் பறை சாற்றிக்கொள்ள விரும்பவில்லை.

 8. ஏன் ஒருங்குறிமுறை (யூனிகோட்) பெரிய விஷயம்? எவ்வாறு அது தமிழை  முன்னெடுத்துச் செல்கிறது? டாப்/டாம் மற்றும் டிஸ்கியில் ஒன்றை தேர்ந்தெடுத்து  பரவலாக்காமல், யூனிகோட் நுழைந்தது எப்படி?

இதற்கும் பல ஜாம்பவான்கள் ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறார்கள். யுனிக்கோடைப் பற்றி பாமரன் பாணியில் நான் எழுதிய கட்டுரைத்தொடரிலும் சொல்லியிருக்கிறேன். இருந்தாலும் சிலவற்றை மறுஉறுதிப்படுத்த இங்கு சொல்கிறேன். டாப்/டாம் மற்றும் டிஸ்கியில் இல்லாத யுனிகோடின் முக்கியமான பயன்கள்:
  1. கூகிளில் யுனிகோடு தமிழில் தேடினால் தமிழில் எழுதப்பட்டவை மட்டும் விடைகளாகக் கிடைக்கும். மற்றவற்றில் இதுசாத்தியமில்லை.
  2. விண்டோஸ் எக்ஸ்பி தொடக்கம், யுனிகோடு எழுத்துரு கணினியுடன் ஏற்கனவே நிறுவப்பட்டு வருவதால் உடனடியாக பரவலாக தமிழ்கையாளமுடிகிறது. மற்றவற்றில் ஒருவர் எழுத்துருவை இறக்கி நிறுவியாகவேண்டும். எல்லா இடங்களிலும் இது சாத்தியமில்லை.
  3. மற்ற மொழிகளோடு ஒத்து உறையும் தன்மை. ஒரு கோப்பு எத்தனை கணினிகள் வழியாகப் பயணித்தாலும் அதன் உள்ளடக்கம் மாறாது. மற்றவை தனக்கு உரிமையில்லாத இடத்தில் உறைவதால் இந்த வசதி அவற்றுக்கு இல்லை.
பயன்களோடு இதற்கு சில விலையும் கொடுக்கிறோம். எது சரி எதுசரியில்லை என்பதை நான் சொல்ல முடியாது. ஆனால் யுனிகோடு பரவும் வேகத்தில் இனி இந்தக் கேள்வி காணாமல் போய்விடும் என்று தோன்றுகிறது.

 9. இணையத்தமிழின் வாசகர்கள் எப்படி இருக்கிறார்கள்? நிஜமாகவே ஆழ்ந்து  அலசி படிக்கிறார்களா? அல்லது தலைப்பு நுனிப்புல் மேய்ந்துவிட்டுப்  பறந்துவிடுகிறார்களா?

நானே பெரிய தமிழ் 'வாசகன்' அல்லன். கதை, கவிதை, நாவல் வாசிப்பவர்தான் வாசகர் என்ற (எனக்கு அவ்வளவாக ஒப்புமையில்லாத) வரையறை இங்கு இருப்பதாக உணர்கிறேன். எனவே எனக்கு பதில் சொல்லத்தெரியவில்லை.

 10. கொஞ்சம் பெர்சனல்  தங்களின் குடும்பம் குறித்துப் பகிர்ந்து கொள்ள  முடியுமா? தங்களுடைய குடும்ப நேரத்துக்கும், தமிழுக்கான நேரத்தையும் எப்படி  சமாளிக்கிறீர்கள்? நேர நிர்வாகம் குறித்து என்னைப் போன்று சிண்டைப்  பிய்த்துக் கொள்ளும் வலைஞர்களுக்கு டிப்ஸ் கொடுங்க 

என் குடும்பம் சாதாரண உழைப்பாளி குடும்பம்தான். இல்லத்தரசியும் இரண்டு குழந்தைகளும். நேர நிர்வாகத்தில் நான் பெரிய புலியெல்லாம் இல்லை. ஒன்றில் ஆர்வம் வந்துவிட்டால் அதில் மூழ்கிப்போய்விடுவேன். நானே நேரநிர்வாகத்தில் உங்களிடம் டிப்ஸ் கேட்கவேண்டும் இன்னும் முக்கியமான வேலையையெல்லாம் ஊறப்போட்டு மனைவியிடம் பாட்டு வாங்குபவன்தான்.

 11. தாங்கள் கணினியில் ப்ரொக்ராம் செய்பவர் அல்ல. தமிழ்மணத்திற்கு  முன்பு நிரலிகள் எழுதியது உண்டா? எந்த (computer) மொழியைக்  கையாளுகிறீர்கள்? இந்த அனுபவங்கள் தங்கள் தொழில் தடத்தை  மாற்றியமைக்குமா?

நான் தொழில்முறையில் கணினியில் மென்பொருள் எழுதுபவனல்ல. அதாவது வேறு ஒருவருக்காக, தேவைகளை கேட்டு, எழுதிக்கொடுத்தல் நான் செய்ததில்லை. ஆனால் அதற்காக ப்ரோகிராம் எழுதியதே இல்லை என்று அர்த்தமில்லை. என் (அலுவலக) சொந்த தேவைகளுக்காக பல மொழிகளில் சிறு நிரல்கள் எழுதுவேன். ஆனாலும் இடையில் ஒரு 7 ஆண்டுகள் என் பணியில் சுத்தமாக எழுதாமல் இருந்தேன். மீண்டும் இப்போது செய்யும் பணியில் அவ்வப்போது எழுதுவேன். அலுவலகத்தில் நான் பயன்படுத்தும் மொழிகள் வேறு, அவற்றை குறிப்பிட்ட மென்கலனுக்கு வெளியே கேள்விப்பட்டே இருக்கமுடியாது.

தமிழ்மணம் தளத்தை அமைக்க PHP என்னும் மொழியைக் கற்றேன். இயங்கு வலைப்பக்கங்களைக் (dynamic webpages) கொண்டு அமையும் இணையத்தளங்களை இந்த மொழியைக்கொண்டு சிறப்பாகக் கையாளமுடிகிறது. அத்துடன் திறமூல (Opensource) இயக்கங்கள் இந்த மொழியில் நிறைய நிரல் தொகுப்புக்களை பலரும் இலவசமாகப் பயன்படுத்த அளிக்கின்றன. தமிழ்மணம் தளத்தில் செய்தியோடை திரட்டும் வேலை அப்படிக் கிடைத்த ஒரு இலவச நிரல்தொகுப்பின் மூலமே செய்யப்படுகிறது.

நல்ல சமயத்தில் கேட்டீர்கள். உண்மையிலேயே நான் இப்போது கற்றுக்கொண்ட(கொண்டிருக்கும்) PHP மொழியறிவு என் அலுவலகத்திலும் பயனாக ஆரம்பித்துவிட்டது. புதிதாக நான் இறங்கிய ஒரு வேலையில் இரு சாத்தியங்கள் இருந்தன: சி++/ஜாவா போன்ற மேசைத்தளத்தில் நிறுவக்கூடிய கருவியாக செய்வது ஒன்று. ஒரு வழங்கியில் நிறுவப்பட்டு இணைய உலாவி வழியாக இயங்கும் கருவியாக செய்வது ஒன்று. இதுவே போன வருடமாக இருந்தால் இரண்டாவது வழியின் அடிப்படைக்கூறுகளே பிடிபட்டிருக்காது. முதல் வழியில் நான் இன்னொருவரின் உதவியை நாடவேண்டியிருந்திருக்கும். இன்று தமிழ்மணம் மூலம் கிடைத்த அனுபவம் எனக்கு இரண்டாவது வழியின் அனுகூலங்களை உணரச்செய்ததோடு, பிறர் உதவியின்றி நானே செய்யவும் வகைசெய்தது. ஆக வலைப்பதிவுகளில் ஈடுபடுவது வெறும் பொழுதுபோக்கில்லை, எழுத்தாளராக இருந்தால் எழுத்து வளம்பெறும், பொறியாளராக இருந்தால் கருவிகள் கூர்மைப்படும். மேலாளராக இருந்தால் தகவல்மேலாண்மைவின் வீச்சும் வீரியமும் புலப்படும்.

 12. நயாகரா அருகில் இருக்கிறீர்கள். எத்தனை முறை நயாகரா  சென்றிருக்கிறீர்கள்? அலுத்து விட்டதா?

ஒரு ஆறேழு முறை சென்றிருப்பேன். ஆமாம் அலுத்துவிட்டது. எவ்வளவுதான் நயாகரா பெரிய அருவியானாலும், நம் ஊரில் மலை இடுக்குகளில் வழிந்துவரும் சிறு அருவிகளில் விழுந்து புரண்டு அடையும் ஆனந்தத்துக்கு அருகில் கூட வரமுடியாது. கோவையில் இருக்கும்வரை இம்மாதிரி நீரோடைகளுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வோம். எனக்கு அதுதான் மிகவும் பிடிக்கும்.

13. பின்னூட்டங்கள் தங்கள் பதிவுகளின் உள்ளடக்கத்தையும், எண்ணிக்கையையும்  எவ்வாறு பாதிக்கிறது?

பின்னூட்டங்கள் கட்டாயம் முக்கியமானவை. அதிலும் ஆரம்ப நிலையில் இருக்கும் வலைப்பதிவர்களுக்கு இவையே தொடர்ந்து எழுத ஆர்வத்தைத் தருகின்றன. காலப் போக்கில் 'உடனடிப் பின்னூட்டங்கள் இல்லாவிட்டாலும் பலநாட்கள் கழித்தும் வாசிக்கப்படுபவை வலைப்பதிவுகள், வாசிப்பவர் அனைவரும் பின்னூட்டமிடமாட்டார்கள்' என்றதெல்லாம் புரிய ஆரம்பித்ததும் இவற்றிற்கான எதிர்பார்ப்புக் குறையும். குறிப்பாக தினசரி நடப்புகளைப் பற்றி சுவாரசியமாக எழுதுபவர்கள் பின்னூட்டமில்லாவிட்டால் அதிகம் சோர்வடைய வாய்ப்பிருக்கிறது. என் வலைப்பதிவை எடுத்துக்கொண்டால் நான் பல வலைப்பதிவுகளை வாசித்துப் பின்னூட்டமிடுவதனாலோ என்னவோ நண்பர்கள் பின்னூட்டத்தின்மூலம் நன்றாகவே ஊக்குவித்திருக்கிறார்கள். வெறுமனே ஊக்குவிக்கமட்டும் என்றில்லாமல் விட்டுப்போனவற்றை இட்டு நிரப்புதல், தவறுகளை சுட்டிக்காட்டுதல் என்று பங்களிக்கும் பின்னூட்டங்கள் இன்னும் அதிகம் வரவேண்டும். ஆனால் கருத்தைத் திசைமாற்றி நேரத்தையும் ஆர்வத்தையும் விரயமாக்கும் ஊசிப்போன வறட்டு விவாதங்கள் குறையவேண்டும்.

 14. திருக்குறள், கம்பியில்லா வலைப்பின்னல் போன்ற பல முக்கிய ஆக்கங்கள்  கொடுத்திருக்கிறீர்கள். இவற்றை தொகுத்து புத்தகமாக்கும் எண்ணங்கள்  இருக்கிறதா?

(கேலியில்லையே!) கம்பியில்லா வலைப்பின்னல் ஒரு சோதனை முயற்சி. அது நாளும் மாறிக்கொண்டேயிருக்கும் துறை. நானும் அதில் கரை கண்டவனில்லை. எனவே புத்தகம் போட அதற்குத் தகுதி இருப்பதாக எண்ணவில்லை. திருக்குறளைப்பற்றி ஏதோ இரண்டு கட்டுரை எழுதினேன். அவ்வளவுதான். புத்தகம் போடுமளவுக்கு இன்னும் எழுதவில்லை. எதாவது ஒரு தலைப்பில் ஆழ்ந்து எழுதும்போது பார்க்கலாம்.

 15. தங்களின் எழுத்தார்வம் எவ்வாறு இருக்கிறது? வலைப்பதிவின் மூலம் எந்தத்  தலைப்புகளில் விரிவாக கட்டுரை எழுத விருப்பம்?

பொதுவாக எனக்கு தொழில்நுட்பம்/சமூகவியல் சார்ந்த கட்டுரைகள் எழுதத்தான் ஆர்வம். புனைவுஆக்கங்கள் பக்கமே போகமாட்டேன், அவற்றை வாசிப்பதே கூட குறைவுதான். பெரிய திட்டம் எதுவும் இல்லை. பார்க்கலாம்.

 16. நீங்கள் வலைப்பதிவில் கண்ட அதிசய பழக்கவழக்கம் என்ன?

பலரும் ஆர்வமாக ஆரம்பித்து ஓரிரு பத்திகள் எழுதிய 'உடனே பின்னூட்டத்தில் சொல்லுங்கள் மேலே எழுதுவேன்' என்கிறார்கள். அதுதான் ஆச்சரியமாக இருக்கும். என்னவோ பின்னூட்டமிடுவதே கடமையென சிலர் இவர்களுக்காக காத்திருப்பதுபோல! எழுத ஆர்வமிருந்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம். நன்றாக இருந்தால் கட்டாயம் வாசிப்பார்கள், இல்லாவிட்டால் யோசிப்பார்கள். அவசரப்படக்கூடாது.

 17. சன் டிவி பேட்டிகளின் மூலம் ஒரு கெட்ட பழக்கவழக்கம் என்னைத்  தொற்றிக் கொண்டுள்ளது. ஏழு வயதில் தேசிய விருது வாங்கிய குழந்தை  நட்சத்திரத்திடம் பேட்டி முடியும் சமயத்தில், 'உங்கள் நேயர்களுக்கு என்ன  சொல்ல விரும்புகிறீர்கள்?' என்று கேட்பார்கள்.  உங்களிடம் இதைக் கேட்பது பொருத்தம்; என்னுடைய கேள்வி கேட்கும்  பற்றாக்குறையையும் தீர்க்கும். தமிழ் வலை வாசகர்களுக்கு என்ன குறிப்பிட  நினைக்கிறீர்கள்?

ஏழுவயதே ஆனாலும் தேசியவிருது வாங்கியவர்களைத்தானே கேட்கிறார்கள், என்னை ஏன் அவர்களோடு சேர்க்கிறீர்கள்? மன்னிக்கவும், வாசகர்களுக்கு செய்தி சொல்லும் அளவுக்கு என்னிடம் ஒன்றுமில்லை, வேண்டுமானால் தமிழோவியத்தோடு சேர்ந்து அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன். நன்றி.

Friday, February 2, 2024

திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது.

 சில ஆண்டுகளில் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.


மத்திய அரசின் செல்வாக்கை பெற்று, பிரதமர் ஆதரவை பெற்று திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிமுக எடுத்த முயற்சிககு ஓரளவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படவில்லை. ஆளும் கட்சியான அதிமுகவிற்கு ஆதரவு அளித்தார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்து சக்திகளும் செயல்பட்டன. திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது.

கடந்த தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள்ளேயே பிரதமர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தந்தி அனுப்பியது ஏன்?. இந்தியாவில் நடந்த தேர்தல்களில் தமிழகத்தில் மட்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் பல சக்திகள் இணைந்து செயல்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்தால் திராவிடன் மார்பை நிமித்திக்கொண்டு நடப்பான். திராவிடர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதனாலேயே திமுகவிற்கு எதிரான வேலைகள் நடந்தேரியது.

4 பேரை வைத்துக்கொண்டு, 5 பேரை விலக்கி விட்டு அரசியல் நடத்துகிற கட்சி அல்ல திமுக. வலிமையான, வளமான, பகுத்தறிவு இயக்கமாக திமுக விளங்கி வருகிறது. இப்போது தோல்வி படிக்கட்டில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். இதிலிருந்து வெற்றி படிக்கட்டை நாம் மிதிக்க வேண்டும். சில ஆண்டுகளில் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.

#DMK

(For Archival purpose) 
https://twitter.com/kalaignar89/status/750568976510545920

Friday, January 19, 2024

சனிப்பெயர்ச்சி அன்று படிக்க வேண்டிய நளன்கதை



ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கி னான். தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள். சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன், என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள். இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. ""இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்? என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.



இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி,குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான். பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான். அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். ""சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.



சனிப்பெயர்ச்சி நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்.


நளன் கதை படித்த நீங்கள், உங்கள் கடமையைச் சரிவரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்.

வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை தெரியுமா?

வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை தெரியுமா?
செப்டம்பர் 28,2012


Temple images
கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி, தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம், தனித்த காளியும், கால கண்டன் படமும் ஆகாது, சனிஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கக்கூடாது, நவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது, சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது, ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும் கோபவேசமாக தவ நிலையிலுள்ளதும், தலைவிரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகை படங்கள் இல்லங்களில் பூஜைக்கு ஆகாது.

Wednesday, January 4, 2023

நாகேஷ் பற்றி வாலி சொன்னது

'நாகேஷுடன் நெருங்கிப் பழகியவர் நீங்கள். அவரது அன்பைப் போற்றும்விதமான நினைவைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''




 '' 'நல்லவன் வாழ்வான்’ படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பு வந்தபோது - அந்தக் கம்பெனி இருக்கும் இடம் தெரியாததால் நாகேஷை உடன் அழைத்துச் சென்றேன். நாகேஷ், சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டு இருந்த காலம் அது. 'நெஞ்சில் ஓர் ஆலயம்’ வெளிவராத நேரம். 1960-ம் ஆண்டு. டைரக்டர் திரு.ப.நீலகண்டன் அறைக்குள் நானும் நாகேஷ§ம் நுழைந்தோம்.

'உங்கள் இருவரில் யார் வாலி?’ என்று பா.நீலகண்டன் வினவினார்.

'நான்தான்’ என்றேன்.

'உடன் வந்திருப்பது யார்?’ என்று வினவினார்.

'என் நண்பர் நாகேஷ்’ என்றேன்.

உடனே - 'தம்பி! நீ வெளியே இரு... நீயா பாட்டெழுதப்போறே?’ என்று நாகேஷை முகத்தில் அடித்தாற்போல் வெளியேறச் சொன்னார் நீலகண்டன்.

இதை மனதில் வைத்துக்கொண்டு நாகேஷ் விரும்பியிருந்தால் - பின்னாளில் 'ப.நீலகண்டன் இயக்கினால் நடிக்க மாட்டேன்’ என்று சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லியிருந்தால் ப.நீலகண்டன் அவர்களுக்குப் பல எம்.ஜி.ஆர். படங்கள் வாய்க்காமல் போயிருக்கும்.
நாகேஷ் அப்படிச் சொல்லவில்லை; THAT IS NAGESH!''

08-ஆகஸ்ட்-2012

Wednesday, April 20, 2022

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

 கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். உரையாடல் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமாக இருந்தது. பேசிக்கொண்டு இருக்கும் போது ஒருத்தர் ஸ்ரீராம் சென்னைக்காரன் என்றார். உடனே கலிஃபோர்னியாகாரர் நான் ஹிந்தி பேசுவதைப் பற்றி ஆச்சர்யப்பட்டுவிட்டு தமிழர்கள் ஏன் ஹிந்தி கத்துக்க மாட்டேங்கறாங்க, அவங்களுக்கு என்னதான் பிரச்சனைன்னு ஒரு மாதிரியான தொனியில் கேட்டார்.


பாஸ்டனில் இன்று Zero Degree, என்னைப் பாருங்க நல்ல Thick Jacket வச்சிருக்கேன், நீங்க ஏன் இப்படி மெலிசான Jacket போட்டுக்கிட்டு நடுங்கறீங்க, நல்ல Jacket வாங்கியிருக்கலாமேன்னு கேட்டேன். அதுக்கு அவர், தானிருப்பது கலிஃபோர்னியா அந்த இடத்துக்கு மெலிதான Jacket போதும் என்றார்.

டில்லி போவதற்கு முன் தமிழ்நாட்டில் வாழ எனக்கு ஹிந்தி தேவைப்படலை அதனால கத்துக்கல, டில்லி போனதும் தேவைப்பட்டது ஹிந்தி கத்துக்கிட்டேன், நாளைக்கே ஃப்ரான்ஸில் வாழணும்னா ஃப்ரென்ச் கத்துப்பேன். எப்படி நீங்க வாழும் இடத்துக்கு ஏற்ப உடை வாங்கறீங்களோ அது போல யாருக்கு என்ன தேவையோ அதை அவரவர் கத்துக்கப் போறாங்க. எப்படி உங்களை நான் Thick Jacket வாங்கச் சொல்லி வற்புறுத்த முடியாதோ அதுபோல தேவையற்றதை கத்துக்கச் சொல்லி தமிழர்களை நீங்க வற்புறுத்த முடியாதுன்னேன்

நான் ஹிந்தி பேசுவதால் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என்ற பொய்யை ஆதரிப்பேன்னு நினைச்சிட்டார் போல.

Tuesday, May 12, 2020

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூனியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான். அதற்கு மொழியில்லை. இளையராஜாவின் How to Name it ல் வரும் வயலின் இசை கமழ்ந்து வரும் பொழுது இதயம் கனக்கும், கனமென்றால் அப்படியொரு கனம் இருக்கும். இதயம் அறுந்து விழுந்துவிடுமோ என்கிற ஐயம் மனதில் எழுமளவுக்கு இதயம் கனக்கும். கண்களில் கண்ணீர் வர மறுக்கும். கண்ணீர் வர மனதில்  ஓரளவுக்கு
சோகமிருந்தால் போதும், கண்ணீர் வர மறுக்கும் சோகத்தின் எல்லையை இன்மை காட்டும். இன்மையின் உணர்வுக்கு அளவு கோல் வைத்து அளக்கும் அளவிற்கு யாருக்கு துணிவும் இல்லை, ஏனெனில் அந்த சோகத்தை ஏற்கும் மனநிலையை யாரும் வேண்டுவதில்லை. இன்மை, அதுவாக நம்முள் முள் வைத்து தைத்துவிட்டுப் போகும், இல்லை, தைத்துக்கொண்டே இருக்கும்.


டு இரவில் எழும் பொழுதே மனதின் வலி உணரலோடு எழுந்தால் பிறகு அந்த வலி நாள் முழுக்க இருக்கும், கண்கள் மூடியிருக்கும், உறங்க கண்கள் இரண்டும் கெஞ்சும். கண்கள் கெஞ்சி பார்க்கும், பிறகு இதயம் கொண்ட வலியை கண்களும் ஏற்கப் பழகிக்கொள்ளும். விழலுக்கு இறைத்த நீரைப்போல  கிஞ்சித்தும் உபயோகமில்லாத கண்களின் கெஞ்சலை சற்றும் பொருட்படுத்தாது இதயம் தன்னிஷ்டப்படி வலியை உணர்ந்துகொண்டே இருக்கும். அந்த வலி இரவு வரை தொடரும், சில நாட்கள் இரவு கடக்கும், மீண்டும் கண்கள் கெஞ்சும், ஆனால் இதயம் மிரட்டி கண்களை அடக்கிவிடும்.

வாழ்க்கையில் நாம் கடக்கும் இரவுகளின் தூரத்தை யாரும் அளந்து விட்டிருப்பதில்லை, தூங்கிக் கடக்கிறோம், அதனால் அதன் நீளம், வண்ணம் அறியாமலே இருப்போம். ஓர் இரவு முழுக்க இதயம் அதன் வலியை உணர்ந்துகொண்டிருக்கும் பொழுது, இமை மூடிய கண்கள் தூங்காமல் இருக்கையில், இரவின் நீளம் தெரியும், இரவு ஏன் அமைதியில்லாமல் இருக்கிறது என எண்ணத் தோன்றும், இரவின் வண்ணம் தெரியும், அதன் இரைச்சல் தெரியும், இரவின் ஓலமும் நமக்குக் கேட்கும்.


மீண்டும் மீண்டும் ஒரே நினைவினில் வாழ்ந்து பழக்கப்பட்ட வாழ்வில், திடீரென அதனை மாற்ற எத்தனிக்கும் தருணங்களில், தலை அறுபட்ட ஆட்டின் கதறல் போன்று ஓர் ஓலம் எழும், அந்த ஓலம், அதீத இரைச்சல் கொண்டது, நம்மைச் சுற்றிலும் பேரமைதி இருக்கும், ஆனால் மனத்திற்கு புயலடித்துக்கொண்டிருக்கும்.  அறிவு இதனையெல்லாம் புரிந்துகொண்டிருக்கும், ஆனால் உணர்ந்து கொண்டிருக்காது.




யார் சொன்னது இன்மை அமைதியானது என்று? அதன் பேரிரைச்சலில், உடலின் அனைத்து உறுப்புகளும் அந்த இரைச்சலை உற்று நோக்கும். இன்மைக்கான காரணத்தை மனம் அறியும், மனம் மட்டுமே அறியும், என்னைச் சுற்றி வரும் குதூகலத்தில் மனம் லயிப்பதில்லை, அனைவரும் சிரிக்கும்பொழுது நானும் சிரித்து வைப்பேன், அதனைப் பார்த்த மனம் சிரிக்கும், அது எக்காளச் சிரிப்பென்று உதடும் அறியும். மீண்டும் மீண்டும் வரும் இரவு வரும், மீண்டும் மீண்டும் வலி வரும், மீண்டும் மீண்டும் கண்கள் கெஞ்சும், இறுதியில் இதயத்தின் வலியே வெல்லும்.. அது இன்மை தரும் வலி..

Wednesday, March 11, 2020

அவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே

மதியம் 2 மணி இருக்கும், இது 18 வது முறையாக அழைக்கிறேன். நைட் ஷிப்ட் முடிந்து வந்து தூங்கியிருப்பான் ராஜ். அவனைத்தான் மொபைலில் எழுப்பிக்கொண்டிருந்தேன். "ஹலோ" என்று கர கரத்த குரலில் சொன்னான் ராஜ்.


"என்னடா"

"மச்சான், நவீனாவை மஹாப்ஸ்ல ஹோட்டல் வாசலில் பார்த்தேன்டா. எவன் கூடவோ சிரிச்சு பேசிட்டு இருந்தாங்கடா"

"ஹ்ம்ம் தெரியும்டா, ப்ரேம் கூடதான் போயிருப்பா"

The Curious Case of Falling Phone Talk

"என்ன மச்சான் இவ்வளவு அசால்ட்டா சொல்றே? அவ உன் லவ்வர்டா. மஹாப்ஸ்ல அதுவும் அங்கே வந்து சாப்பிடறளவுக்கு இங்கே என்னடா வேலை?"

"சொல்லிட்டுதான் போனாடா. அவன் அவளோட பிரண்ட்தான் மச்சான். விடு, சாயங்காலம் வந்துருவா"

"டேய், உனக்கு பதட்டமாவே இல்லையாடா? லிவிங் டுகெதர்ல இருக்கிற அவ எப்படிடா இன்னொருத்தன் கூட போலாம். விடு தப்பே செய்யலைன்னு வெச்சிக்குவோம், அவன் கூட பைக்ல வந்திருக்கா. எப்படிடா அலவ் பண்றே? டூ யூ லவ் ஹர்?"

"கண்டிப்பாடா, அவளை சின்சியரா லவ் பண்றேன். அதுல எந்த சந்தேகமும் இல்லை. நாந்தான் அவளை நல்லா பார்த்துக்கிறேனே.. அப்புறம் என்ன?"

"மச்சான். அவ இன்னொருத்தான் கூட பழகுறது உனக்கு பொஸசிவ்வா இல்லையா? "

"இருக்குடா, அவளை நான் லவ் பண்றேன். அவ என்ன செஞ்சாலும் அவ என்னோட லவ்வர் மச்சான். அவதான் பிரண்டுன்னு சொல்லிட்டு போனா. அப்படியே தப்பு நடந்தாலும் அவளுக்கு தெரியாமலா நடக்கப் போகுது? அவளை நான் நம்புறேன். "

அவளும் லவ் பண்றாதானே?

தெரியல, எப்பவாச்சும் சொல்வாடா? ஆனா அவ அன்புக்காரி மச்சான். என்னோட அத்தனை சண்டையையும் ஒரு நொடியில அவ அன்பால அடக்கிடுவா.அவ அன்பு போதாதா மச்சான். சொல்லு? அதுதாண்டா எனக்கு வேனும். அதை அவ தரா. திகட்ட திகட்ட தராடா. ஒன்னு தெரியுமா மச்சான். எவ்வளவு சண்டை வந்தாலும் என்னை விட மாட்டாடா. நான் வேனும்னு ஒத்த கால்ல நிப்பாடா. அவளுக்கு நான் வேணும்ங்கிறதுல ரொம்ப கண்டிப்பா இருப்பாடா. அது போதும் மச்சான் எனக்கு.

மச்சான் இருந்தாலும், இன்னொருத்தன் கூட..

இருக்கட்டும்டா, அவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே, ஆனா என்கிட்டதானே வரா. என்னை விட்டு போகலையே. அவ சந்தோசம் அதுவோ அதை அவ செய்யட்டும்டா.. என்னவா இருந்தாலும்..

"உன்னை... விடு மச்சான்.." போனை கடுப்புல கட் செய்தேன்.


நவீனாவை அழைத்தான் ராஜ் "பேபி, ராத்திரிக்கு என்ன வேணும், சமைக்கப் போறேன்."

"செல்லம்டா நீயு, நீ எது செஞ்சாலும் ஓகே பேபி. ம்ம்ம்மா ", என்று போனுக்கு முத்தமிட்டாள் நவீனா

Thursday, January 23, 2020

WhatsApp DP - சிறுகதை

காலை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பார்ட்மெண்டில், வெவ்வேறு ப்ளாக்கில் வசிப்பவர்கள், ஒரே அலுவலகத்தில் பணி புரிபவர்கள், முப்பதுகளின் மத்தியில் இருப்பவர்கள். இருவருக்கும் திருமணமாகி 2 பையன்கள் உண்டு. அடிக்கடி குடும்ப சகிதமாக சந்தித்துக்கொள்வோம். பையன்கள் எல்லாம் ஒரே வயதாக இருந்த காரணத்தினால், Potluck அடிக்கடி நடக்கும். வாரயிறுதியும், தீபாவளி, பொங்கல் மாதிரியான கொண்டாட்டங்கள் எல்லாம் இப்படியே ஓடும்.



சுந்தரி WhatsApp DPயை  அடிக்கடி மாற்றுவது வழக்கமாக வைத்திருந்தாள். புதுப் புடவை உடுத்தினால் அதைப் படமெடுத்து அதை WhatsApp DPயாக சில நாட்கள் வைத்திருப்பாள், சில நாட்கள் பூக்கள் மட்டும் வைத்திருப்பாள். இப்படியாக இருந்த அவளது WhatsApp DPக்கள், ஒரு மாதத்திற்கு முன்பு வேறு
பரிமாணம் எடுக்க ஆரம்பித்தது. Private Chatல் குறைந்த பட்சம் 30 நிமிடங்ளாக தினமும் எதையாவது Chat செய்து கொள்வோம். அப்படித்தான் WhatsApp DPயை கவனிக்க ஆரம்பித்தேன். திடீரென சோகமாக இருக்கும் குழந்தை படம் வைத்திருப்பாள். அன்று அவள் சோகமாகத்தான் இருப்பாள். ஒரு நாள் சம்பந்தமே இல்லாமல் முள் படம் வைத்திருப்பாள், ஒரு நாள் கல்யாண மோதிர படம் வைத்திருப்பாள். ஆனால் அன்று அவளது கல்யாண நாளாக இருக்காது. ஒரு நாள் புன்னகை மன்னன் ரேவதி படம் வைத்திருந்தாள், ஒரு நாள் காதல் கோட்டை தேவையாணி படம் வைத்திருந்தாள்.


ப்படியாக WhatsApp DPயிலேயே சுவாரஸ்யம் கூட்டிக்கொண்டே சென்றாள். அவள் WhatsApp DP மூலம் எழுதும் கதை மீது பித்துப் பிடித்துப்போனது எனக்கு..நேரடியாக ஒரு நாள் அவளிடம் கேட்டே விட்டேன். அதற்கு சுந்தரியோ "போடீ, நானே வேலை பொழப்பு இல்லாம மாத்திட்டு இருக்கேன், நீ பெருசா கேட்க வந்துட்டே, போய் வேலையைப் பாரு" என்று நகர்ந்து விட்டாள்.  ஆனாலும் எனக்கு என்னமோ ஒரு எண்ணம். அதை குரூர புத்தி என்றும் சொல்லலாம். ஒரு நாள் அந்த குரூர புத்தி தோன்றியது. அவளது மொபைலைத் திருடி WhatsApp படித்தால் என்ன என்று தோன்றியது. அன்று முழுவதும் எனக்கு வேலையே ஓடவில்லை. அவளது Lock Patternஐ கண்டுபிடிப்பது முதல் வேலையாக இருந்தது,  ஒரு நாள் அவளது சீட்டிற்கு பின்னாடி உட்கார்ந்தேன். என்ன chat செய்கிறாள் என்று எட்டி பார்த்துக்கொண்டே வந்தேன். ஒரு முறை Unlock செய்யும் பொழுது கண்டு பிடித்துவிட்டேன். சரி, இப்போ அவளது மொபைல் மட்டும் கிடைத்தால் போதும், அவளது WhatsApp எல்லாம் படித்துவிடலாம். என்னவாகவோ இருக்கட்டும், ஆனால் படம் மாற்றுவது மட்டும் என்னவென்று தெரிந்துகொண்டால் போதும்.

ப்படியாகவே இரு வாரம் சென்றது. சனிக்கிழமை காலை ஒரு நாள் வீட்டிற்கு வந்தாள், எதையோ பேசிக்கொண்டிருந்தவள், அவளது மொபைலை ஹாலிலிருந்த டேபிள் மேல் வைத்துவிட்டு சமையலறைக்கு வந்தாள். இதுதான் சமயம் என்று அவள் சமையல் அறையில் இருக்கையிலேயே வெளிவே வந்து சட்டென்று அவளது மொபைலை ஆஃப் செய்து சோபாவின் அடியில் சொருகி வைத்துவிட்டு பிறகு சமையலறைக்குச் சென்றேன்.மிகவும் படபடப்பாக இருந்தது.  படபடப்பை காட்டிக்கொள்ளாமலே வழக்கம் போல பேச ஆரம்பித்தேன்..
"சரி, நான் கிளம்புறேன். துவைக்கனும், அப்புறமா வீட்டுக்கு வா" என்று சொல்லிவிட்டு ஹாலுக்கு வந்தவள், "என் ஃபோனை பார்த்தியா? " என்று கேட்டாள்.

"நீ ஃபோனை கொண்டு வந்தியா? நான் பார்க்கவே இல்லையே, வீட்டுல வெச்சிட்டு வந்திருப்பே.. எதுக்கும் வீட்டுக்குப் போய் பார்த்துட்டு சொல்லு" என்றேன்.

டபடப்பாக நடந்து போனாள் சுந்தரி. நானும் படபடப்பாக ஃபோனை எடுத்து அவளது On செய்து, pattern lock போட்டு, AeroPlane மோடை ஆன் செய்தேன். WhatsApp போனேன். நேற்று அவள் இதயம் ஹீரா படம் வைத்திருந்தாள். அவளது Chat முழுவதையும் Scroll செய்ய ஆரம்பித்தேன். இதயம் முரளி படம் பார்த்ததும் சட்டென அந்த Chatஐ Open செய்தேன்.எனக்கோ விரல்கள் எல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. வாசலுக்கு வந்து வராண்டாவை பார்த்தேன், அநேகமாக சுந்தரி வீட்டில் ஃபோனைத் தேடிக்கொண்டிருக்கலாம். இரண்டும் நிமிடத்தில் படிக்க முடியுமா எனப் பார்த்தேன். பெரிய பெரிய Chatகளாக இருந்தது. வராண்டாவில்  திரும்பி என் அப்பார்ட்மெண்டுக்கு ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தாள் சுந்தரி. "போச்சு.. போச்சு.. மாட்டிக்கப் போறோம்" என வாசற் கதவைச் சாத்தி பூட்டிவிட்டு வேகமாக சமையலறைக்கு வந்து அந்த Chatஐ scroll செய்து செய்து Photoக்கள் எடுத்தேன்.  30 விநாடிகளில் சுந்தரி வந்துவிடுவாள். அந்த Phone numberஐயும் photo எடுத்தேன்.  காலிங் பெல் அடித்தது. சட்டென அவளது ஃபோனை ஆஃப் செய்து ஹாலின் டிவிக்கு முன்பு வைத்தேன். கதவைத் திறந்தேன்.

'என்னாச்சு கிடைச்சதா?'

"இல்லை, இங்கேதான் கொண்டு வந்தேன், ஞாபகமிருக்கு, இப்போ ஃபோன் பண்ணினால் Switched Off அப்படின்னு வருது"

"அப்படியா இரு" என்று சமையலறைக்கு வந்து எனது ஃபோனை எடுத்து அவளது எண்ணுக்கு அழைத்தேன்,  Switched Off என்று வந்தது. வராதா பின்னே, நாந்தானே ஆஃப் செய்து வைத்தேன்..

'ஆமா எங்கே வெச்சே, ஞாபகமிருக்கா?'

'ஹால் சோஃபா டேபில் மேலதான் வெச்ச ஞாபகம்'

'வெச்சா எங்கே போயிரும்' என்று தேடுவதைப் போல நானும் பாவலா காட்ட ஆரம்பிச்சேன்.

தேடிக்கொண்டே வந்தவள் டிவிக்கு முன்னாடி இருந்த ஃபோனைப் பார்த்ததும் . "அட இங்க பாரு, டிவிக்கு முன்னாடி வெச்சிருக்கேன். பேட்டரி காலி போல, அதான்  Switched Off அப்படின்னு வந்திருக்கு. 10 நிமிசம், கலக்கிருச்சு போ" என்று சொல்லி கிளம்பியவளை வழி அனுப்பி வைத்துவிட்டு வந்து அந்த போட்டோக்களை பார்த்தேன்.

காதல் காதல்  காதல் .. அத்தனை Messageகளிலும் காதல் சொட்ட சொட்ட பேசியிருக்கிறார்கள். அடிப்பாவி சுந்தரி நீயா இப்படி? இத்தனைக் காதலா உனக்குள்ள இருக்கு? காதல்காரிடீ என்று மனசுக்குள் நினைத்தேன். இப்படியெல்லாம் கூட சுந்தரிக்கு பேச வருமா என ஆச்சர்யப்பட்டேன். சரி, யாரு இவளுடைய ஆள் என்று பார்த்தேன். John USA என்று save செய்து வைத்திருந்தாள். ஆனால் +91 என்று ஆரம்பித்த எண் அது. அடிப்பாவி என்னா தில்லாலங்கடிடீ என்று நினைத்து அந்த எண்ணை என் ஃபோனில் அடித்து தேடினேன். "HUSBAND-OFFICE PHONE" என மின்னியது 

Wednesday, February 27, 2019

போர் .. ஆமாம் போர்

    என்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை தேநீர் இடத்தில் சந்தித்தேன். ஒரு தர்ம சங்கடமா நிலைமையில்தான் இருந்தோம். இரு நாட்டுக்கும் போர் நடக்கும் சமயத்தில் இப்படியொரு சந்திப்பு ஒரு விதமான நமுட்டுச் சிரிப்புடன் அவரை கடந்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் வழக்கம் போல, தோளில் தட்டி சகஜமாக பேச ஆரம்பித்தார்.

    அவரைப் பற்றி, 1990களில் அமெரிக்க வந்த அவர், அமெரிக்க பிரஜை ஆகி பல வருடங்கள் ஆயிற்று. அவருக்கு 3 மூன்று பெண்கள், அனைவரும் இங்கே பிறந்ததால் அமெரிக்க பிரஜைகள்தான். அமெரிக்க வெள்ளை நிறப்பெண்களும் அவர்களுக்கும் சிறிது வித்தியாசமும் இல்லாதவாறுதான் இருப்பார்கள்.  இந்திய அமெரிக்க மக்களைப் போலதான் அவருக்கும் பாக் மக்களுடனான நெருக்கமும் இருக்கும். ஹலால் கடைகளில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார். கிரிக்கெட் பார்ப்பார், அவரது பெற்றோரை, சகோதர குடும்பங்களைப் பார்த்து வர இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பாக் போய் வருவார்.

 ன்று காலை அவரிடம் பேசியதிலிருந்து ஒரு சில :  பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். (அவர் பிறந்து வளர்ந்த காலத்தில் நல்ல கட்சியாக இருந்ததாம்). இப்போது அவர் பாகிஸ்தானில் இருந்தால் அந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பாராம். பாகிஸ்தானில் இரு கட்சிகள்தான் பிரதானம்  நம்ம திமுக, அதிமுக மாதிரி வெச்சிக்குவோம். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி, பல கட்சிகள் இருந்தாலும் இவை இரண்டும்தான் கடந்த காலத்தில் மாற்றி மாற்றி ஆட்சி அமைத்துக்கொண்டவை. 1996 க்குப் பிறகான இம்ரான் கானின் அரசியல்  பிரவேசம் பாகிஸ்தான் மக்களிடம் நிறைய மன மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறதாம்.  கட்சி ஆரம்பித்து 22 வருடங்கள் கழித்தே அவர் ஆட்சியில் அமர்ந்தார், அதுவும் கூட்டணி ஆட்சிதான் எனினும் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறார். பாகிஸ்தான் இளைஞர்கள் அனைவரும் இம்ரான் கட்சியின் மீது அதிகம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

வர் ஆட்சியேற்ற பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்ததாகச் சொல்கிறார். இம்ரானுக்கு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் POK அதிகம் நாட்டமில்லை, காரணம், அதற்காக பாகிஸ்தான் செலவழிக்கும் பணத்தை வேறு நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம், அதுவுமில்லாமல் தேவையில்லாத பதட்டம் வேறு. இன்னொன்றையும் அவர் சொன்னது : பாகிஸ்தான் ஊடகங்கள் சமீப காலமாக உண்மைகளைச் சொல்லி வருகிறார்களாம். முன்னெல்லாம் ஆட்சி பீடத்தில் சொல்லும் செய்திகள்தான் வருமாம்.

    ந்தப் பிரச்சினை பற்றி அவர் சொன்னதை அப்படியே தருகிறேன். இன்றைய நிலையில் அமைதியை விரும்பும் இம்ரான் இந்தியாவிடம் போரிடுவதை விரும்பவில்லை. அவரது பார்வையில் இந்திய அரசாங்கம் வீணாக வம்பு வளர்கிறது. அதற்குக் காரணம் அவர்களது தேர்தல்களம். இன்றைய இந்திய வீரரை சிறையெடுத்ததும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கத்தான், ஆனால் இன்றைய இந்திய அரசாங்கம் போரையே விரும்புவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த இரண்டு நாட்களாக சொல்லிவருகிறார்களாம். தேர்தல், வாக்கு என்று இரண்டுமே பாகிஸ்தானின் இன்றைய தேவையில்லை. அதனால இதில் அரசியல் செய்ய இம்ரான் கானுக்கும் விருப்பமில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு ஐ. நா சபையை நாடலாம் என்றும் நினைக்கிறார். அவரைப் பொறுத்தவரை காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை. அரசியலுக்காகவும் வாக்குக்களுக்காகவும் மக்களைத் தூண்டிவிட்டதன் விளைவை இன்று காஷ்மீரத்து மக்கள்தான் அனுபவித்து வருகிறார்கள், அதாவது இந்திய மக்கள். இதைச் சொல்லி முடிக்கும் போது அவர் உண்மையாகவே வருத்தப்பட்டதாகத்தான் உணர்கிறேன். ஒன்று மட்டும் நிச்சயம் முற்காலத்தில் அரசியலுக்காகவும், வாக்குகளுக்காகவும் காஷ்மீரத்தை வைத்து மதம் பூசி நன்றாக கொளுத்திருக்கிறார்கள் பாகிஸ்தானின் இரு கட்சியினரும். இன்று அதை இம்ரான் விரும்பவில்லை என்பது மட்டும் நிச்சயம். ஆனாலும் பாகிஸ்தான் சமூக ஊடகளிலும் நிறை வதந்திகளையும், பொய் படங்களையும் பரப்பி வருகிறதாகவும் வருத்தப்பட்ட்டார்.

    தில் என் பார்வை என்னவென்று கேட்டார் "எனக்கு முழு உண்மையறியவே முடியவில்லை. காரணம் எந்த ஊடகமும் சரியான தகவல் தரவில்லை. இதில் சமூக ஊடகங்களில் ஆளும் கட்சி ஆதரவாளர்களின் தாண்டவம் வேறு சந்தேகத்தை நிச்சயமாக்கியது. நேற்று வரை கொண்டாடிய ஊடகங்கள், இன்று BBC, Reuters, Aljazeera போன்ற ஊடகங்கள் இந்திய இராணுவத்தாக்குதலில் எந்த சேதாரமும் என்று சொன்னதும் நேற்று சொன்ன சேதியை மழுப்பலாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள், NDTVயோ, மறைமுகமாக ஏதோ நடக்கிறது, எதையும் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை பின்வாங்க ஆரம்பித்து விட்டது. இம்ரானின் இன்றைய மாலை நேரத்து (PKT) பேட்டியும் நண்பர் சொன்னதை நிஜமென நம்ப வைக்கிறது. கேப்டன், அர்ஜுன் காலத்தில் (1990களில்) சொன்னது எல்லாம் எவ்வளவு நிஜமென்று நம்பியிருந்தாலும் கால மாற்றதில் யாரும் போரை விரும்புவதில்லை, அதிலும் செலவு பிடிக்கும் விசயம். அமெரிக்கா போரை விரும்புகிறதென்றால் அதில் வியாபாரம் இருக்கிறது. பாகிஸ்தான் போரை விரும்ப என்ன இருக்கிறது அரசியலும் வாக்குகளையும் தவிர. ஆனாலும் அவர்கள் போட்ட விதை முளைத்திருக்கிறது. அறுவடை செய்யும் காலத்தை இரு நாடுகளுமே எட்டிவிட்டார்கள். நல்லது நடக்கட்டும். மீட்டிங்கிற்கு நேரமாயிற்று, அப்புறமா பார்க்கலாம்" என்று சொல்லி கிளம்பிவிட்டேன்.


  அமெரிக்கா இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது. காரணம் இன்று  ட்ரம்ப் அவர்களும் வட கொரிய அதிபரும் சந்தித்துக்கொள்கிறார்கள், அதனால் இந்திய- பாகிஸ்தான் பிரச்சினை எல்லாம் கண்டுக்கொள்ள நேரமும் இருக்காது.

  
நாளையும் நாங்கள் இருவரும் இதே போல தேநீர் பருகுவோம், பேட்மிண்டன் விளையாடுவோம், நண்பர்களாத்தான் இருக்கப் போகிறோம்.

Monday, October 30, 2017

பேங்க் மேனேஜரும் நானும்

ஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன்.  மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மேலாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக  சொத்து பத்திரம் வேண்டும், என்னோட சம்பள சான்றிதழ்  வேண்டும், என் வீட்டுக்காரம்மா கையெழுத்து வேண்டும்,  அப்புறம் இருவரின் கியாரண்டி கையெழுத்து வேண்டும் என்று ஏகப்பட்ட வேண்டும்கள், அனைத்தையும் அளித்து அப்படி இப்படியாக பத்து நாட்களில் கடன் வந்து சேர்ந்தது. 

Image result for bank clip art


கடன் வாங்கிய தேதியிலிருந்து சரியாக வட்டியும் முதலுமாக கட்டிக் கொண்டே வந்தேன், இடையே ஒரு சேமிப்பு கணக்கையும் ஒன்றைத் துவக்கி சிறிய பணத்தை மாதா மாதம் சேர்க்க ஆரம்பித்தேன். கடன் சரியாக 3 வருடத்தில் முடிந்தது, கடன் கட்டி முடித்த சான்றிதழ் வாங்க வங்கிக்கு வரச் சொன்னார் மேலாளர்.


அன்று மேலாளரைச் சந்திக்க சிரமம் ஏதுமில்லை, வங்கியின் முழு வருட கணக்கு இந்த மாதம் இறுதியில் வருகிறது, ஏதாவது ஒரு பெரிய 
தொகையை எங்க வங்கியில் வைப்புத் தொகையாக போட்டால் 
உதவியாக இருக்கும் என்று நேரடியாகவே கேட்டார் மேலாளர்.

எனக்கும் இது தானே சந்தர்ப்பம், உடனே நானும் அவரிடம் 
"ஓ, தாரளமாக டெபாசிட் பண்ணுறேன். ஆனால் அதுக்கு  நீங்க உங்களோட அல்லது உங்க பாங்க்கோட சொத்துப் 
பத்திரம், உங்க சம்பள சர்டிபிகேட், உங்க வீட்டுக்காரம்மா  கையெழுத்து, அப்புறம் உங்களை விட பெரிய ஆபீசர்  ரெண்டுபேரோட கியாரண்டி கையெழுத்து எல்லாம் வேணும், இதெல்லாம் கொடுத்தா நான் உங்க பாங்க்கில டெபாசிட் போடறேன்" என்றேன்.

அவர் கேட்டதைத்தான் கேட்டேன், அதற்கு ஏன் என்னை முறைத்தார் என்று தெரியவில்லை.



நாங்க கேட்டால் மட்டும் கடன், 

நீங்க கேட்டா டெபாசிட்டா ??? என்னங்க..?? 
நம்பிக்கை, நாணயமுங்குறது 
ரெண்டு பக்கமும் இருக்கணுமில்லீங்களா...??? 

இந்த நாட்டில் அவருக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா?


Img Courtesy http://clipartview.com

Tuesday, June 27, 2017

சிறுவாட்டுக்காசு

நான் சிறுவனாக இருக்கையில்
செலவுக்கு காசு வேண்டி அப்பாவிடம் நிற்கும்போதெல்லாம்
அப்பா தன் காக்கி அன்ட்ராயரில் துழாவுவார்
கிடைக்கும் சில்லறைகளை அப்படியே தந்துவிடுவார்.
மாசக் கடைசியென்றால் முறைத்துப் பார்ப்பார்
இல்லையென்பதாக நான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவர் தரும் சில்லறைகளுக்கு பீடி நாற்றமிருக்கும்,
சில நேரங்களில்  வெற்றிலை வாசமிருக்கும்,
சில நேரங்களில் புகையிலை வாசமிருக்கும்,
சில நேரங்களில் திருநீறுவாசமிருக்கும்,
சில நேரங்களில் மல்லிகைப் பூ வாசமிருக்கும்,
சில நேரங்களில் சாராயம் வாசமிருக்கும்,
சில நேரங்களில் அழுக்கு வாசமும் இருக்கும்.

அப்பா கொடுக்க மறுத்த பணத்திற்குப்பின் அம்மா தரும் பணத்திற்கு பல வித வாசனைகள் இருக்கும்


சில நேரங்களில்  பொட்டுக்கடலை வாசனையிருக்கும்,
சில நேரங்களில்  பச்சரிசி வாசனையிருக்கும்,
சில நேரங்களில்  வர மிளகாய் வாசனையிருக்கும்,
சில நேரங்களில்  கடலைப் பருப்பு வாசனையிருக்கும்,
சில நேரங்களில்  கொத்தமல்லி வாசனையிருக்கும்,


சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு பணத்திற்கான வாசனை இருப்பதில்லை,
சட சடவென ஏடிஎம் ஓடும் சத்தம் கேட்கும்,
பிறகு அதனை பர்சில் வைப்பதை வழக்கமாகிவிட்ட எனக்கு
அதன் வாசனையை மட்டும்
ஏனோ நுகரத் தோணுவதே இல்லை...


ஆனாலும்

அம்மா தரும் பணத்திற்கும் என்றுமே வாசனையுண்டு!

Saturday, May 6, 2017

காலப் போக்கில் அழிந்து போகும் சில

1980களில் ராதாகிரி அண்ணன் ஊரில தட்டச்சு பயிலகம் நடத்திவந்தவர். “அண்ணே இதைவிட்டு வேற வேலைக்குப் போய்டலாமே?” என்றால் “டேய், எது அழிஞ்சாலும் இந்தத் தொழில் அழியாதுடா, காயிதமும் எழுத்தும் இருக்கிற வரைக்கும் தட்டச்சு வேணும்” என்பார்,  பிடிவாதக்காரர். பிறகு சில வருடங்களில் அவரது பயிலகத்திற்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. 10 வருடங்கள் கழித்து திரும்ப ஊருக்குப்போனபோது, ராதாகிரி அண்ணன் Internet Browsing center/Xerox கடையாக மாற்றியிருந்தாரு. “என்ன அண்ணே ஆச்சு” என்றதற்கு, ”காலத்துக்கு ஏத்தாப்ல மாறினாத்தான் பொழைக்க முடியும்டா” என்றார்.

இன்றைய காலத்தில் நாம் புழங்கும், அவையெல்லாம் இல்லையென்றால் நம்மால் வாழ முடியாது என்று நாம் நினைக்கும் பல சாதனங்கள் அழிந்துவிடும். இதைச்சொன்னால் நாமும் ராதாகிரி அண்ணன் போல இல்லை என்று பிடிவாதம் பிடிப்போம்.

பிடிவாதம் பிடிக்காமல் யோசித்துப்பார்த்தால் பல விசயங்கள் நமது எண்ணத்திற்கு வரும், அதில் சிலவற்றை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன்.




தந்தி வழி தொடர்புகள்:
இப்போது இருக்கும் தந்திவழி  Cable தொலைக்காட்சி, தொலைபேசி இரண்டுமே அழிந்து போகும்.  இவையிரண்டுமே தந்தியில்லா முறையில் புழங்க ஆரம்பிக்கும். Dialup Modem, electronic typewriting Machine என்ற சாதனங்கள் எல்லாம் நமது கண் 

முன்னேமேயே, அதிக நாள் வாழாமல் போன சாதங்கள். அதுவும் இந்த 20 வருடங்களுக்குள்தான் கண்டோமே.. இல்லத்திரையரங்க சாதனங்கள் எல்லாம் கம்பியில்லா சாதனங்களாக மாற ஆரம்பித்தாயிற்று என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.




தொலைக்காட்சி:
தொலைக்காட்சி என்ற சாதனம் இருக்கும், தொலைக்காட்சி என்று நாம் இப்பொழுது கண்டு வரும் வழிமுறை மாறிப்போகும், நினைத்த நேரத்தில் முன்னகர்த்தியோ, பின்னகர்த்தியோ நிகழ்ச்சிகளை கண்டு களித்துக்கொள்ளலாம். செய்திகள், விளையாட்டு போன்ற சில நிகழ்வுகள்  

மட்டுமே நேரலையாக இருக்க வாய்ப்பிருக்கும்.


ஓட்டுநர்:
இப்போது நாம் ஊர்த்திகளை ஓட்டிவருகிறோம், விபத்துகள் ஏற்படுத்தி வருகிறோம். சில கவனக்குறைவுகளால் எத்துணை உயிரிழப்புகள்? வருங்காலத்தில் இவயெல்லாம் இருக்காது, தானியங்கி மகிழுந்துகள், ஊர்த்திகள், கனரக வாகனங்கள், புகைவண்டி வரும். இன்றைய பயன்பாட்டில்

இருக்கும் GPSஐ ஊர்த்திலேயே ஒரு கருவியாக்கி வைத்திருப்பார்கள். அதுவுமில்லாமல் Speedlimit என்பதையும் நினைவகத்தில் வைத்து ஊர்த்திகள் தயாரிக்கப்பட்டிருக்கும். இதனால சாலைவிபத்துகள் பெருமளவு குறைந்துவிடும். என்ன? நாம் அவசரமாக செல்லவேண்டும் ஏன்று

நம் அவசரத்திற்கு வண்டிகளை வேகமாக ஓட்டிப்போவது நடக்காது, அதன் வேகத்தில்தான் போகும், நமக்கு பொறுமையும் அவசியம். அதே நேரத்தில் சரியான நேரத்தில் கிளம்பும் பழக்கம் வந்துவிடும்.


கைக்கடிகாரம்:
இது இன்னும் 20 வருடத்துக்குள் கைக்கடிகாரம் காணாமல் போய்விடும் என் கணிப்பு. இந்தத் தலைமுறை பதின்ம வயதினரே கைக்கடிகாரங்களை விரும்புவதில்லை. ”நேரம் பார்க்க கணினி, அலைபேசி என்றிருக்கையில் அது எதற்கு தேவையில்லாமல்?” என்ற சொல்லாடல் இப்பொழுதே கேட்க ஆரம்பித்துவிட்டோமே. கைக்கடிகாரம் ஸ்மார்ட் வாட்ச் என்று மாறி இன்று மணி பார்க்க மட்டுமில்லாமல் உடல் நலத்திற்காக மாறிப்போயிருச்சு..



கணினி:
மடிக்கணினி,  மேசைக்கணினி என்பதெல்லாம் பயன்பாட்டில் இல்லாமல் போய்விடும். கைக்கணினி (Smartphones) மட்டுமே பயன்பாட்டிலிருக்கும். கைக்கணினிகளுக்கு, திரைகள் வேண்டுமானால் ஒரு இணைப்பாக இருக்கலாம், ஆனால் மூலமாக கைக்கணினிகள் மட்டுமே

இருக்கும்.  கொளுவுக்கணிமை(Virtual Computing) நமது வீடு வரைக்கும் வந்துவிட்டிருக்கும். வீட்டிலிருக்கும் கணினிகளும் செயல்படுவது வேறிடமாக இருக்கும், அதாவது மேகக்கணிமை(Cloud) பெருமளவுக்கு பயன்பாட்டிலிருக்கும். எந்தவிதமான தரவுகளும்(data)

நம்மிடமில்லாமல் வேறிடத்தில் பத்திரமாக இருக்கும்.



அலுவலகங்கள்:
அலுவலகத்திற்குச் சென்று வேலை பார்ப்பது என்பது அரிதாகிவிடும். அவசரப்படாதீர்கள், பணி செய்வதென்பது இருக்கும், அதற்காக அலுவலகத்திற்குத்தான் சென்று வரவேண்டுமென்பதில்லை. மேசைகளில் முடியும், மக்களைச் சந்திப்பது என்பதெல்லாம் எங்கிருந்தும் செய்யக்கூடிய

வேலைகளை. Video Conferencing, teleconferencing என்பதுதான் இன்று நாம் சொல்லும் Meetingன் அடுத்த கட்டமாக இருக்கும். அவையெல்லாம் வீட்டிலிருந்தே செய்து கொள்ளலாமே இதனால் அலுவலக இடம் மீதம், அலுவலக செலவுகளும் மீதம். வீட்டிலிருந்து

வேலை செய்வதென்பது பிரதானமாகிவிடும். இணையமில்லா வாழ்க்கை அரை வாழ்க்கை என்ற புதுமொழி கூட வரும்.


உணவு:
ஆமாம், உணவு என்பதும் கூட இல்லாமல் போகலாம். நம் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் குளிகைகளாகி வரும். சுவைகளைக்கூட நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம், வயிற்றில் சுரக்கும் அமிலத்தையும் கட்டுப்படுத்த ஏதாவது குளிகைகள் வரலாம். நம்முள்ளேயே மரபணு மாற்றங்கள் வரலாம். நேரமின்மை வயிற்று உபாதைகள் காரணமாக வரும் பிரச்சினைகள் அனைத்திற்கும் இந்தக் குளிகைகள் ஒரு அறுமருந்தாக இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துகளும் சரி விகிதத்தில் அனைத்து குழந்தைகளுக்கு குளிகைகள் மூலம் அளிக்கப்படும். ஏன் தண்ணீருக்குக்கூட மாற்றாக குளிகைகளே வரலாம். முடியாது என்பவர்கள் விண்வெளியில் பணியிலிருக்கும் சிலரின் வாழ்க்கை முறையை உதாரணமாகக் கொள்ளலாம்.


Tuesday, February 14, 2017

சமாதி

எங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம்!

எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்!!

அம்மா சொல்படி எங்கள் கட்சி வளர்ந்தது, அவரால் மட்டுமே இந்தக் கட்சியை நல்வழியில் கொண்டு செலுத்த முடிந்தது!!

அம்மா மறைந்த பிறகு இந்தக் கட்சி உடைந்து போயிருக்கும், சின்னம்மாவால்தான் கட்சி இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது!! 

அம்மாவின் சமாதியில் அனைவரின் மனசாட்சியும் பேசிக்கொண்டிருந்தது

அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது எம்.ஜி.ஆர் சமாதி!!!

Wednesday, July 20, 2016

கபாலி (முந்திரிக்கொட்டை) விமர்சனம்


படம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை
1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக்காமல் படம் வந்திருக்கிறது
2. வழக்கமாக ரஜினி படங்களில் சோகமான முடிவுகள் இருக்காது. இப்படம் அதில் விதி விலக்கு
3. ராதிகா ஆப்தேவிற்கு விருது கிடைக்கும்
4. பின்னணி இசை அமைத்ததிலேயே இந்தப் படம்தான் டாப்
5. தர்மதுரை, படையப்பாவிற்குப் பின் ரஜினி அவர்களுக்கு வயதான வேடத்தில் சிறப்பாக அமைந்த படம் இது
{படத்தின் செய்தித் துணுக்குகளை வைத்து பட்டி பார்த்து டிங்கரிங் செய்தவை, மேலே சொன்னவை உண்மையாகக் கூட இருக்கலாம்}

கதை: மலேசியாவில் கொத்தடிமைகளின் காலத்தில் போராடும் ரஜினிகாந்த் பெரிய டான்'ஆக மாறுகிறார். இதனால் அவருக்கு தமிழ் அல்லாத சில மக்களால் தொல்லை. எதிரிகளால் அவரது சில குடும்ப நபர்களின் உயிரிழப்புகளின் காரணமாக பொது வாழ்க்கையிலிருந்து மறைந்து வாழ்கிறார். சுமாராக அவரது 55 வயதில் மீண்டும் இருட்டுலகில் இருந்து வெளி வந்து அதே எதிரிகளை எதிர்க்க வேண்டி வருகிறது. மீண்டும் அவருடன் இணைகிறார்கள் பழைய நண்பர்கள். எதிரிகளை ரஜினிகாந்த் பழி வாங்கினாரா இல்லையா என்பதே இறுதிக்காட்சி.

Wednesday, May 11, 2016

Whatsapp விவாதங்கள்

அமெரிக்காவில் வாழ் மக்களின் whatsapp குழுக்களில் ஒன்று. தினமும் காலை எழுந்தததிலிருந்து இரவு படுக்க போகும் வரை பெரிய அடிதடி நடந்துகொண்டே இருக்கும். அதுவும் எதற்கு தெரியுமா? அடுத்து அம்மா ஆட்சி வேண்டுமா? ஐயா ஆட்சி வேண்டுமா? இல்லை கேப்டன் ஆட்சி வேண்டுமா என்று.  இதில் கொடுமை என்னவென்றால் இணையத்தை விட கேவலமா எதிர் கட்சியைத் திட்டிக்கொள்வதுதான், குழுவில் இருப்பவர்கள் அனைவருமே நண்பர்கள் என்பது வேறு விசயம். இதில் குறிப்பிடத்தக்க இன்னோர் விஷயம், குழுவில் இருக்கும் பாதிபேருக்கு இந்தியாவில வாக்குரிமை இல்லை, அதாவது அமெரிக்க வாசிகளாக மாறி பல ஆண்டுகள் ஆனவர்கள். மீதி பாதிப் பேர் வாக்களிக்க எக்காரணம் கொண்டும் போக மாட்டார்கள். இவர்கள்தான் தமிழகத்தின் அடுத்த ஆட்சியைப் பற்றி விவாதிப்பவர்கள்.

காலையில் அந்தக் குழுமம் போனவுடன் ஒன்றே ஒன்றுதான் தோன்றும், அதையும் நடிகர் கமல் அவர்கள் சொல்லி வைத்துவிட்டார் "போய் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கடா"

Wednesday, January 13, 2016

சல்லிக்கட்டு ஒரு சப்பைக்கட்டு

நாங்கள் க்ரிக்கெட், இறகுப் பந்து என்று விளையாடிக் கொண்டிருக்கையில் "விளையாட்டுன்னா அது  கபடி மாதிரி வீரமா இருக்கனும்டா, அதை விட்டுட்டு இது எல்லாம் விளையாட்டா?" என்று சொல்லுவான் என் நண்பன் செந்தில். இது கொங்கு வட்டாரம் என்பதால் கபடியே வீரமான விளையாட்டாக சொல்லிக்கொண்டான். இதே மதுரைப் பக்கமாக இருந்தால் சல்லிக்கட்டு என்று சொல்லியிருப்பானாக இருக்கும்.

சல்லிக்கட்டு, இன்று பலவாறான பரபரப்புகளை பரப்பிக்கொண்டிருக்கிறது இணையத்தில். இது தான் தமிழன் வீரமென்றும், பண்டைய தமிழர்களுக்கான விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. அப்படியா? முதல்வன் படத்தில் சம்பந்தமேயில்லாமல் "எங்க ஜாதி ஆளை அடிச்சி போயிருவானா?" என்று திடீரெனக் கூவும் போக்குவரத்து ஊழியர் மாதிரி , ஒரு சாதிக்காரர்கள் இது எங்கள் விளையாட்டு இதில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்று போராட்டம் வேறு. அப்ப மத்த சாதிக்காரனுக்கு அது வீரமில்லையா? இதில் மாடுகளைக் காப்பாற்ற வழக்குகள் வேறு. அடப்பாவிகளா, மாட்டு மேல பரிதாபப் பட்டுதான் வேணாம்ங்கிறீங்களா? மனுசனுக்கு அடிபடுமே அதைப் பத்தி கவலைப் படலையா? மாடு முட்டி சாவறானே அவனுக்கு இழப்பீடு என்ன கிடைத்துவிடும்? எந்த காப்பீடு திட்டமாவது இதற்காக இருக்கா? இருக்காது. ஏனெனில் இதற்கெல்லாம் காப்பீடு கிடைக்காது. அடிபடுறானே, அவனை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்வீர்கள்? உங்க ஒரு நாள் கூத்துக்கு செத்துப்போறவனுக்கும், கால், கை போறவனுக்கும் நீங்க என்ன செஞ்சிருக்கீங்க? மாட்டை கொடுமை படுத்துகிறார்கள் என்று போராடும் மக்களை விட்டுவிடுவோம். அவர்களுக்கு மாட்டுக்கறி விற்கும் கடைகளுக்கான முகவரி தெரியாமல் இருந்திருக்கும். வீரம் வீரம் அப்படின்னு சொல்லிட்டு செத்துப்போறவனுக்காக யார் போராடப்போறாங்க? விவேக் தெளிவாகவே ஒரு படத்தில் சல்லிக்கட்டை எதிர்த்து பேசியிருப்பார். மனுசன் தெரிஞ்சு தான் போராடுறான், அப்ப என்ன வேண்டுமென்றாலும் ஆகட்டும் என்பது எல்லாம் முட்டாள்தனத்தின் வெளிப்பாடு.

வீரமென்றால் அடுத்த வருடம் காளைகளை விட்டுவிட்டு சிங்கம், புலி போன்ற விலங்குகளை வீரம் என்ற பெயரில் அடக்கிக்கொள்ளுங்கள்.  மதுரை வட்டாரங்களைத் தவிர்த்து வேறு எங்கும் நடைபெறாத இந்த விளையாட்டை தமிழர்களின் பண்பாடு என்று பொதுமைப் படுத்தாதீர்கள்.

Tuesday, December 15, 2015

பீப் பதிவு

காலையில் எழுந்தவுடனே மொபைல் எடுத்துப்பார்த்தேன், வழக்கமா எங்க குரூப்ல நல்ல ஸ்கேண்டில போடுவாங்க. அன்னிக்கு ஒன்னும் வரலை, ப்ச், சரி விடு என்று ஜன்னலைத் திறந்து பார்த்தேன். வழக்கமா வர ஆன்டி அன்னிக்கு காணோம், 2 குழந்தை பிறந்திருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருப்பார். படபடவென கிளம்பினேன். பைக்கை ஸ்டார்ட் செய்து ரோட்டில் வந்தேன். எவனோ ஒரு பொறம்போக்கு ஆட்டோக்காரன் உரசுற மாதிரி வந்துட்டுப் போனான். வெச்சி நல்லா திட்டிட்டேன். அவுங்கம்மால ஆரம்பிச்சி, அக்கா, தங்கச்சி, ஒருத்தரையும் விடாம திட்டித் தீர்த்தேன். நல்ல வேளை அவன் பாட்டுக்கு ஆட்டோவை நிறுத்தாம போயிட்டான். இவுனுங்களை எல்லாம் ... சரி விடுவோம், அதான் போயிட்டான்ல.




பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் வந்தேன், தங்கையின் ப்ரெண்ட் ஒருத்தி நின்னுட்டு இருந்தா, எப்படியும் பேசி கரெக்ட் பண்ணலாம்னு பார்க்கிறேன். எப்பப்பார்த்தாலும் அண்ணா ணொண்ணான்னு கூப்பிட்டு கடுப்படிப்பா. அதுக்குள்ளார பஸ் வந்திருச்சு. தே**** **யன் பஸ் டிரைவர் அஞ்சி நிமிசம் கழிச்சி வந்தாத்தான் என்னவாம்?  இந்த நேரத்தில் டாஸ்மாக் போகுற இரண்டு குடிமகன்கள் அடிக்காத குறையா என்னைத்தாண்டி போனார்கள். அவர்களுக்குத்தெரியாது அங்கே ஏற்கனவே ஒருத்தர் மட்டையாகி தெருன்னுகூட பார்க்காம மட்டையாக கிடந்தான். காலங்கார்த்தாலேயேவாடா? எப்படிடா முடியுது? நமக்கு வேலை இருக்கு, போவோம்.

ஆபீஸ் வந்தேன், தம் பத்த வெச்சி நின்னுட்டு இருந்தேன், போன வாரம் வரைக்கும் ஒன்னா சரக்கடிக்கிற பொண்ணு வந்தா, தம் கேட்டா பத்த வெச்சிட்டு கண்டுக்காம போயிட்டா. அவ எல்லாம் பெரிய பார்ட்டி., கார்ல வரனும் அதுக்கெல்லாம். 8:30 ஆபிஸுக்கு 10:30 மணிக்கு வந்தேன். ஈமெயில் பார்க்கிறதுக்கு முன்னாடி ஃபேஸ்புக், டிவிட்டர் எல்லாம் பார்த்தேன். சிம்பு இவ்ளோ கேவலமா பாடியிருப்பான்னு நினைக்கவே இல்லை. இவனாலதான் இந்தக் கலாச்சாரமே அழிஞ்சு போவுது. ஃபேஸ்புக்ல திட்டிட்டு வேலை பார்க்க ஆரம்பிச்சேன். 

Friday, December 11, 2015

முண்டாசுக் கவி


பல வருடமாச்சு எங்க தேசம் உனை மறந்து!
ஆச்சர்யம் ஒன்றுமில்லை
நீ என்ன கட்சியா
ஆரம்பித்தாய்?










பேசினாய் எழுதினாய்,
கரடியாய் கத்தினாய்,
தமிழென்றாய், சுதந்திரமென்றாய்,
சமஉரிமை என்றாய், ஜாதியும் இல்லையென்றாய்,
எவனுக்கு வேணும் உன் வார்த்தை,
இடுப்பு மச்சம் தெரியுதாம்
கிளம்புகிறோம் வெண்திரைக்கு.



உனக்கும் ஜாதிமுலாம் பூசிவிட்டோம்
மறைத்துக்கொள் உன் முகத்தை,
முண்டாசு எதற்கு இருக்கிறது?
அன்பென்றால் கொட்டுவது முரசில்லை பைத்தியக்காரா,
தலைமேலே இடியே விழுகிறது.

உனக்கு இன்று பிறந்தநாளாமே
யாருக்குத் தெரியும்
எதற்கு தெரிய வேண்டும்?
தெரிந்துதான் என்ன ஆகப் போகிறது?
வாக்களித்தால் காசு கிடைக்கும்,
உனை வாழ்த்தினால் ஒரு சிங்கிள் டீ கிடைக்குமா?

அடைபட்டு போனோம் சிறுவட்டத்தில்
வேண்டாம் உனது கவிதைகள்
மனம் பிறழ்ந்தவர்கள் படிப்பார்கள், மகிழ்வார்கள்.
நாங்களெல்லாம் தினக்கூலிகள்,
மாரடித்தே பழக்கப்பட்டுவிட்டோம்.

உனது படைப்புகள் எல்லாம் வரலாற்றுப்
புத்தகத்தில் வருமென காத்திருப்பவர்கள்.
மனமேற்றி வாந்தியெடுத்தால் ஐந்து மதிப்பெண்ணுக்கு
மட்டுமே யோக்கியப்படும் உனது படைப்புகள்.

பாரதத்தில் பிறந்தாய்,
பாரதியாய் வாழ்ந்தாய்,
பாராமுகமாய் இருக்கிறாய்,
பத்திரமாய் மறக்கப்படுவாய்!

வாழ்க தமிழனும், தமிழும்!

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)