Sunday, August 26, 2012

3/365 முதன் முதலில் அண்ணாவைச் சந்தித்ததைப்பற்றி கலைஞர் எழுதியது

(அறிஞர் அண்ணாவை முதன் முதலில் சந்தித்ததைப்பற்றி  முதலமைச்சர் கலைஞர் திரு.மு.கருணாநிதி எழுதியது)

"தம்பி, சேதி தெரியுமா? நபிகள் நாயகம் விழா வில் கலந்துகொள்ள அண்ணா அவர்கள் திருவாரூருக்கு வரப் போகிறார்" என்றார் திரு டி.என்.ராமன். இயக்கத்தைக் கட்டி வளர்த்தவர்களில் தலை சிறந்தவர் இவர்.

இந்தச் செய்தி என் செவிகளில் தேனாகப் பாய்ந்தது. 'அண்ணா வரப்போகிறார். எனது இதயங் கவர்ந்த இலட்சியத் தலைவர் வரப்போகிறார்’ என்று என் உள்ளம் மகிழ்ச்சிப் பெருக்கால் துள்ளியது.

அப்போது நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தேன். 1938-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தீவிரமாக நடந்தபோதே, நான் என்னையத்த சிறுவர்களுக்குத் தலைமை தாங்கி இந்தி எதிர்ப்பு முழக்கங்களுடன் ஊர்வலம் நடத்தியவன்.

மேலும் 'முரசொலி’ என்னும் துண்டுத் தாளை அவ்வப்போது வெளியிட்டு என் எண்ணங்களை எழுத்துக் களாக்கி, என் பணியைத் தொடங் கியவன். 1940-ம் ஆண்டில் திருவாரூரில் நடைபெற்ற நீதிக் கட்சி மாநாட்டில்கூட அண்ணாவை அருகில் இருந்து காணும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இப்போது, இயக்கத் தலைவர்களுடன் தொடர்பு நெருக்கமாகி இருந்ததால், அண்ணாவைக் கண்டு மகிழலாம் எனப் பேராவல்கொண்டு இருந்தேன்.

'விடுதலை’ ஏட்டில் அண்ணாவின் எழுத்துக்கள் என் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு இருந்தன. பின்னர், அவர் காஞ்சியில் இருந்து 'திராவிட நாடு’ இதழைத் தொடங்கியதும் 'இளமைப் பலி’ என்ற தலைப்புடன் 'திராவிட நாடு’ இதழுக்கு ஒரு கட்டுரை தீட்டி அனுப்பினேன். அதுவும் விரைவில் அண்ணா அவர்களால் வெளியிடப்பட்டது. அண்ணாவின் இதழில் என் எழுத்துக்கள் இடம்பெற்றதும் என் உற்சாகம் கரை புரண்டது. என் எழுத்துக் களை அண்ணா அங்கீகரித்து விட்டார் அல்லவா?


இந்தச் சமயத்தில்தான் அண்ணா திருவாரூர் வரும் செய்தி தித்திப்பாக எனக்குத் தரப்பட்டது. என் இயல்பிற்கேற்றவாறு கூட்டத்துக்கான முன்னேற்பாடுகளில் நானும் முனைந்தேன். விளம்பரத் தாட்கள் விநியோகித்தல், சுவரொட்டி ஒட்டுதல், கொடி தயாரித்தல், மேடை அமைத்தல் போன்ற சிறு சிறு ஆக்க வேலைகளில் ஈடுபட்டேன்.



''கருணாநிதி! உன்னை அண்ணா அழைத்து வரச் சொன் னார்'' என்று வந்தார் ஒருவர்.

''அண்ணாவா?''

''ஆமாம், ஆமாம். 'திருவாரூரில் கருணாநிதி என்பவர் யார்? அவரை நான் பார்க்க வேண்டும்’ என்றார். நமது இயக்கத்தில் நீ ஒரே ஒரு கருணாநிதிதானே!'' என்றார்.

கையைத் துடைத்துக்கொண்டு உடனே புறப்பட்டேன். என் உள்ளத்தில் அச்சம் ஒரு பக்கம், ஆனந்தம் ஒரு பக்கம், வியப்பு ஒரு பக்கம், திகைப்பு ஒரு பக்கம், மகிழ்ச்சி பாதி, பயம் பாதி. மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு புறப்பட்டேன்.

வக்கீல் வெங்கடாச்சாரியார் வீட்டின் மாடியில் அண்ணாவைத் தங்கவைத்து இருந்தார்கள். அண்ணாவைச் சூழ்ந்து திருவாரூரின் இயக்கப் பிரமுகர்களான திரு டி.என்.ராமன், டி.என்.லட்சப்பா, ரங்கராசு, சிங்கராயர் போன்றோர் அமர்ந்து இருந்தனர்.

அண்ணாவுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, ''அழைத்தீர்களாமே?'' என்றேன். வார்த்தைகள் தெளிவாக வரவில்லை.

''நீதான் கருணாநிதியா?'' - வெண்கல மணி ஒலித்தது.

''ஆமாம், அண்ணா!''

''என்ன செய்கிறாய்? படிக்கிறாயா தம்பி!''

'ஆமாம்.''

'' 'இளமைப் பலி’ எழுதியது நீதானே?''

''நான்தான் எழுதினேன்!''

''சரி, கட்டுரை நன்றாகத்தான் இருந்தது. ஆனால், உனக்கு இப்போது அந்த வேலை தேவை இல்லை. படிப்பை முடித்துப் பட்டம் பெற்ற பிறகு எழுதத் தொடங்கலாம். கவனமாகப் படி!'' என்றார் அண்ணா.

என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. எழுத்துப் பணியை நிறுத்தச் சொல்கிறாரே! என்னால் இயலுமா?

''வருகிறேன், அண்ணா!'' என்று மட்டும் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

அந்த முதல் சந்திப்பு இன்று என்னைத் தமிழகத்தின் முதல் அமைச்சராக உயர்த்தி இருக்கிறது. ஏறத்தாழ 26 ஆண்டுகள் அண்ணாவுடன் இணைந்துவிட்ட நான், அவர் கிழித்த கோட்டைத் தாண்டியதில்லை. ''படிப்பில் கவனம்கொள்'' என்றாரே, அந்த ஆணையை மட்டும்தான் மீற நேர்ந்திட்டது.

''இன்று கருணாநிதி நான் சொல்வதை அப்படியே நூற்றுக்கு நூறு கேட்டு நடக்கும் நல்ல பழக்கம் அன்றே அவருக்கு இருந்திருக்குமானால், இன்று அவர் ஒரு பல்கலைக்கழகப் பட்டதாரியாக இருந்திருப்பார்!'' என்று அண்ணா பலமுறை வேடிக்கை யாகச் சொல்லியிருக்கிறார்.

அந்த முதல் சந்திப்பை எண்ணி எண்ணி 1969 ஜனவரி வரையில் நான் ஆனந்தக் கண்ணீர் சிந்தினேன்.

அந்தோ, அதற்குப் பிறகு வேதனைக் கண்ணீர் கரை புரள்கிறது!

18-1-1970- விகடனில் வெளியான பத்தி இது.  -நன்றி: விகடன்

4 comments:

  1. அண்ணா அப்போதே தமிழகத்துக்கு என்ன நடக்கும் என அறிந்திருந்தார் என தெரிகிறது. என்ன பண்ணுவது விதி வலியது.

    ReplyDelete
  2. இளா,

    365.1/4 திட்டத்தின் கீழ் பிரபலப்பதிவர்களின் ஃபோர்முலாவில் நீங்களும் இறங்கிட்டிங்க போல :-))

    //அப்போது நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தேன். 1938-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தீவிரமாக நடந்தபோதே, நான் என்னையத்த சிறுவர்களுக்குத் தலைமை தாங்கி இந்தி எதிர்ப்பு முழக்கங்களுடன் ஊர்வலம் நடத்தியவன். //

    மஞ்சத்துண்டு 1924 இல் பொறந்தார் அப்போ 1938 இல் 14 வயசு எனவே 9 ஆம் வகுப்பு ஓகே.

    ஆனால் அண்ணா திராவிட நாடு பத்திரிக்கையை 1942 இல் தான் ஆரம்பித்து இருந்தார், அதில் அதற்கு பின்னரே மஞ்சத்துண்டு எலக்கிய சேவை செய்திருக்க முடியும், அப்படி எனில் எப்படிப்பார்த்தாலும் 18 வயதாகிறது அப்போது.

    10 ஆம் வகுப்பில் ஃபெயிலாக போனதால் அதோடு படிக்கவில்லை, அப்படி எனில் 1939-40 தோடு படிப்பு முடிஞ்சு இருக்கும்.

    அப்புறம் எப்படி 42க்கு பிறகும் படியப்பா என அண்ணா சொல்லி இருப்பார்?

    ஒரு வேளை சும்மாச்சுக்கும் படிக்கிறேன்னு 42 இலும் மஞ்சத்துண்டு அண்ணாவிடம் கதை விட்டு இருக்கலாமோ :-))

    அல்லது பல முறை படிப்பதாக சொல்லி அட்டெம்ப்ட் அடிச்சாரா?

    அப்படியும் தெரியவில்லை, 10 ஆம் வகுப்பு ஃபெயிலானதும் வீட்டை விடு ஓடி ராணுவத்தில் சேரப்போகிறேன் என மிரட்டினதாக நெஞ்சுக்கு நீதியில் ஒரு கதை வேறு சொல்லி இருக்கார்,எனவே பெற்றோரும் இனிமே நீ படிக்கவேண்டாம்னு சொல்லிவிட்டுக்கு அழைத்துக்கொண்டார்களாம்.

    எனவே 40தோடு படிப்பை முழுக்கு போட்டு இருக்கணும், அப்புறம் வருவதெல்லாம் முத்தமிழ் அறிஞரின் புனைவாக இருக்க வேண்டும் :-))

    ReplyDelete
  3. வவ்வால், அண்ணாத்தே, காப்பி - பேஸ்ட்டுக்கே இத்தனை கேள்வியா? விகடனிலிருந்து யாராவது இந்த இடுகையைப் படிச்சா பதில் கிடைக்கலாம்

    குறும்பன் - நன்றி!

    ReplyDelete
  4. இளா,

    ஹி...ஹி படிச்சது உங்க கடையில தானே அப்போ இங்கே தான் கேட்போம் :-))

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)