Sunday, June 14, 2015

குஜ்ஜூ அம்மணி பேசியது என்ன?

வேலைக்குப் போக நியூயார்க் நகரத்திற்கு 2 மணி நேரம் பயணப்பட்ட வேண்டும். ரயிலில் ஒரு மணிநேரம் போகவேண்டியிருக்கும், மீதம் நடந்தும் நியூயார்க் நகர உள்ளூர் ரயிலும் பயணப்பட வேண்டும். அதில்தான் எவ்வளவு சுவாரஸ்யங்கள் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு, செம மொக்கையாக இருக்கும். அதுவும் அமெரிக்க ரயில் பயணங்களில் நீங்களே உங்களை பொழுது போக்கிக்கொள்ள பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஒரு மணி நேரப் பயணத்தை தூங்கிக் கழிக்கலாம் என்று பல முறை நினைத்திருக்கிறேன். ஆனாலும் ஏதோவொன்று தினமும் விழித்திருக்கச் செய்துவிடும். 

இன்று காலை ரயிலில் ஏறியதுமே கண்டேன், கூட்டம் குறைவு, வெள்ளிக்கிழமை ஆதலால் வீட்டிலிருந்தே வேலை செய்வது மக்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. சப்தமில்லாமல் இருந்தது நானிருந்த பெட்டி, இருவர் இருக்கைகளில் ஒருவரும், மூவர் இருக்கைகளில் இருவரும் அல்லது ஒருவராக அமர்ந்து ஆக மொத்தம் பெட்டி “நிரம்பி” வழிந்தது. பலர் அரைகுறை தூக்கத்திலிருந்தார்கள், சிலர் வழக்கம் போல அலைபேசிகளில் பாட்டு கேட்டவாறே திரையை தேய்த்துக்கொண்டிருந்தார்கள். தினசரியைப் பிரித்து பக்கத்துல உக்காந்திருக்கிறவங்க மூஞ்சியில உரசுற வழக்கம் இப்போவெல்லாம் குறைஞ்சிருச்சு. அலைபேசிகளுக்கு நன்றி.

சப்தமில்லாமல் இருந்த பெட்டியில், திடீரென ஒரு அலைபேசி மட்டும் உச்சஸ்தாயியில் அலறியது, ஏதோ பக்திப் பாட்டு போல, குஜராத்தியாய் இருக்கலாம். மூவர் அமரும் இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தார், வயது ஐம்பதுகளில் இருக்கும். நான் பல முறை கண்டிருக்கிறேன். குஜ்ஜூக்களில் பலர் காலை, மாலை என இரு வேளைகளிலும், கையில் பக்தி ஸ்லோகங்கள் கொண்ட காகிதங்களுடன் ஏறுவார்கள், பிறகு மனதுக்குள் படிக்க ஆரம்பிப்பார்கள். நாம் அவர்களைப் பார்த்து நாகரிகம் கருதி சிரித்து, வணக்கம் சொன்னால் லேசாக புன்னகைத்துவிட்டு மீண்டும் ஸ்லோகங்களுக்குள் போய்விடுவார்கள்.

வீறிட்டு பக்திப்பாட்டைப் பாடிக்கொண்டிருந்தது அவருடைய அலைபேசி. பலர் திடுக்கிட்டு விழித்து திரும்பிப் பார்த்தார்கள், குஜ்ஜூ அம்மணியோ சாவதனமாக, கீழேயிருந்த கைப்பையை எடுத்து, நடு இருக்கையில் பையை வைத்து ஜிப்பை மெதுவாக இழுக்க ஆரம்பித்தார். இப்போது பாட்டு இரண்டாம் முறை ஒலிக்க ஆரம்பித்தது. அமைதியாக பக்கத்தில் அமர்ந்திருந்தவர் மனசுக்குள் கடுப்பாக திரும்பி அந்த குஜ்ஜூ அம்மணியைப் பார்த்தார். கு.அம்மணியோ யாரையும் கண்டுக்காமல் கைப்பையிலிருந்த உள் ஜிப்பை திறக்க ஆரம்பித்தார், நான்காம் முறை பாட ஆரம்பித்தது.. இப்போது அதிக சப்தமாக இருந்தது, பெட்டியிலிருந்த அனைவருமே தூக்கம் கலைத்திருந்தார்கள். அதுக்குள்ளிருந்த அலைபேசியை மெதுவாக எடுத்து..... எடுத்து .. எடுத்து .. 

அருகிலிருந்த அப்பிரயாணிக்கோ தாங்க முடியாத கோபம். அம்மணி, மெதுவாக திரையைப் பார்த்தார், எண் சரியாகத் தெரியவில்லை போலும்,  ஐந்தாம் முறையாக ஒலிக்க ஆரம்பித்தது பாடல்..கண்ணாடியைத் தேடி கைப்பையைப் பிரித்தார். அப்பாடா!!!! பக்திப் பாட்டு நின்றிருந்தது. கு.அம்மணி மெதுவாக கண்ணாடியை எடுத்த போது  அலைபேசி சப்தம் போடுவதை நிறுத்தியிருந்தது. ஃபோன் பண்ணினவங்களே கடுப்பாகி கட் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.  அம்மணி அமைதியாக அலைபேசியில் வந்திருந்த எண்ணைப் பார்த்தார், பார்த்தவர் திடீரெனப் பதறினார், ஏதோ குஜராத்தியில் முனகினார்.



இப்பொழுது அலைபேசி அலற ஆரம்பித்தது. அநேகமாக எல்லோரும் அந்தப் பெட்டியிலிருந்த அனைவருமே விழித்தாயிற்று,  ஆடி மாசத்துக்கு வைக்கும் மாரியம்மன் சவுண்ட் சிஸ்டம் கணக்காக  அலறியது அலைபேசி. பதறியபடி எடுத்த அம்மணி மெதுவாக பேச ஆரம்பித்தார், பேசினார். பேசினார்..கொஞ்சமே சப்தம் அதிகம் போட்டு பேசிவிட்டார் போல, ஒரு வெள்ளைக்கார அம்மணி எழுந்திருச்சி "பேசறதுன்னா உனக்கு மட்டும் பேசு, எங்களுக்கும் சேர்த்துப் பேசாதே” என்று சொல்ல, கு.அம்மணி சைகையாலே சரி சரி என்று சொல்லி பேசிக்கொண்டேயிருந்தார். சில நேரத்தில பக பகவென்று சிரித்தார்.  பொட்டி மனிதர்கள் இப்பொழுது பழகிப் போயிருந்தார்கள், அம்மணி சிரித்தால் பொட்டியே சேர்ந்து சிரித்து ஆரவாரம் செய்தது. சொச்சோ என்றால், 10 பேராவது சொச்சோ என்றார்கள். மொழிதான் தெரியவில்லையோ தவிர அனைத்து மக்களும் அவர் உணர்வை பிரதிபலித்தார்கள். இறங்க வேண்டிய இடம் வந்ததும், சிலர் சிரித்தபடியே இறங்கிப் போனார்கள், சிலர் முனுமுனுத்தபடி...

இவ்வாறாக ஒவ்வொரு நாளும் தூக்கம் போயிருது என்பதுதான் அந்த கு. அம்மணியின் பக்கத்து இருக்கையில் உக்காந்திருந்த ஆளுக்குக் கவலை.. 

பின் குறிப்பு: இப்போ முதல் பத்தி படிங்க 

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)