Wednesday, March 13, 2024

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

 

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி

வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது

தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி கேட்ட கேள்விகளுக்கு என் பதில்கள். தமிழோவியம் தீபாவளி மலரில் வெளியானது. இங்கே ஆவணப்படுத்தலுக்காக.

 1. 'தமிழ்மணம்' செயலாக்கும் திட்டம் எவ்வாறு உதித்தது? எந்த  இணையத்தளத்தையாவது முன்மாதிரியாக வைத்துக் கொண்டீர்களா? செயலாக்க  எவ்வளவு நேரம் பிடித்தது? தங்கள் அனுபவங்களைப் பகிரமுடியுமா?

உண்மையில் இப்போது நீங்கள் பார்க்கும் வடிவம் என் மனதில் உருவாகி ஆறுமாதத்துக்கு மேல் ஆகிறது. ஒரு சில நண்பர்களிடம் என் கற்பனையை கதைச்சுருக்கமாய் எழுதியும் காட்டியிருந்தேன். ஆனால் அந்தக் கதையை நானே படமாக எடுப்பேன் என்று அப்போது தெரியாது. அப்படி மனதில் தோன்றியதில் ஒரு சிறு பகுதியை மட்டும் செய்யலாம் என்று ஜூலை மாதத்தில், ஒரு ஓரமாய் ஆரம்பித்தேன். அதுவும், தமிழ்வலைப்பதிவுகளின் பட்டியல் ஒன்று இருக்கிறதல்லவா, அதை எளிதாய் நிர்வகிக்கவும், அதிலிருந்து அவரவர் தங்கள் விருப்பமான திரட்டியில் (ப்ளாக்லைன்ஸ், ஷார்ப்ரீடர் போன்றவை) சேர்த்துக்கொள்ள ஒரு OPML தொகுப்பு வருமாறும் செய்ய மட்டுமே நான் ஆசைப்பட்டேன். இதுவே ஒரு கல்லூரிமாணவர் 'ப்ராஜக்ட் ஒர்க்' என்று இறுதியாண்டில் செய்வாரே, அதே கோணத்தில்தான் செய்ய ஆரம்பித்தேன்.

நியூக்ளியஸ் வலைப்பதிவு மென்கலனை தமிழாக்கம் செய்ய முயன்றதில், தரவுத்தளத்துடன் இணைந்த இயங்கு-வலைப்பக்கங்கள் அவற்றின் ஆற்றல் ஆகியவற்றை கொஞ்சம் உணர்ந்து இந்த வகை மென்கலனிலும் என் அறிவை வளர்த்துக்கொள்ள இந்த திட்டம் கைக்கொடுக்கும் என்றும் எண்ணினேன்.

பெரிதாக ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தை முன்மாதிரியாக சொல்லமுடியாது. இங்கே, அமெரிக்காவில் இருக்கும் இணைய வசதி, கிடைக்கும் நேரம் ஆகியவற்றால் இணையத்தில் மணிக்கணக்காக உலாவுவது என் முக்கியப் பொழுதுபோக்கு. அதிலிருந்து இணையத்தளங்களின் சாத்தியங்கள், வடிவங்கள் பற்றி நிறைய அவதானித்திருக்கிறேன். அவை என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் இந்தத் தளத்தில் இருக்கும். கூகிளின் மானுடம், அமேசானின் வீச்சும் அடர்வும், இன்னும் பல தளங்களின் சில சிறப்பியல்புகள் மனத்தைக் கவர்ந்தவை. அவற்றைப் பார்த்து கட்டிய பொம்மைவீடுதான் இந்த முயற்சி.

முதன்முதலில் நான் தளத்தை வெளியிட்டபோது எனக்கு 6 வாரங்கள் பிடித்தன. அதில் சுமார் 100 மணிநேர உழைப்பு (கற்றுக்குட்டி கற்றுக்கொள்ள ஆகும் காலம், தொழில்முறையில் எழுதுபவருக்கு பாதிநேரத்தில் முடிந்திருக்குமோ என்னவோ) இருக்கும். அப்போது நான் வலைப்பதிவில் எழுதுவதையும் நிறுத்திவைத்துவிட்டேன். இன்னும் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே புதிய வசதிகளை ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கிறேன்.

 2. தினம் ஒரு புது வலைப்பதிவு வரும் இந்த காலகட்டத்தில், தமிழ்மணம்  பல்வேறு பதிவுகளையும் உடனடியாக வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறது.  ஆனால், நாளடைவில் பல்லாயிரக்கணக்காய், தமிழ்ப்பதிவுகள் பல்கிப்  பெருகிய காலத்தில் (அடுத்த வருடம்? , தமிழ்மணம் நீர்த்துப் போகும்  அபாயம் இருக்கிறதா? அப்படி ஒரு நாள் வரும் பட்சத்தில், தமிழ்மணத்தில்  காணக் கிடைக்கும், புதிய பதிவுப் பட்டியல்களும், யாஹ¥ குழுமங்களில் இருக்கும்  மடல் பட்டியல்களும், எவ்வாறு மாறுபடும்?

'நீர்த்துப்போக' என்பதன் முழு அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. ஆனாலும் தமிழ்மணம் போன்று புதிய தளங்கள் அதைவிட மேம்பட்ட ஆற்றல்களுடன் உருவாக வாய்ப்பிருக்கிறது என்பது என் நம்பிக்கை. எண்ணிக்கை அதிகரிக்கும்போது இன்று இருப்பதைப் போலல்லாமல் கருத்தொற்றுமை, கருப்பொருள், அரசியல், போன்ற காரணங்களால் பல குழுக்களாகவும் வலைப்பதிவுகள் குழுமவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது தமிழ்மணம் மட்டுமில்லை, எந்த ஒரு ஒற்றைத்தளமும் வலைப்பதிவுகள் முழுமைக்கும் ஒரே வாசலாக இருக்கமுடியாது, இருந்தாலும் அது பரவலான சுதந்திரமான வளர்ச்சிக்கு வழிவகுக்காது போகவும் வாய்ப்பிருக்கிறது.

யாஹ¥ குழுமங்களில் இருக்கும் மடல்பட்டியல்களுக்கும் வலைப்பதிவுகளுக்கும் இருக்கும் வேறுபாடுகள் கண்கூடானவை. சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. இரண்டும் இருவேறு மட்டத்தில் இயங்குகின்றன. வலைப்பதிவுகள் வராதபோது பலவும் குழுமங்களில் எழுதப்பட்டன. எதுவெல்லாம் குழுமங்களில் எழுதப்படுவதைவிட வலைப்பதிவுகளில் எழுதப்பட்டால் சிறப்பாக இருக்குமோ அவையெல்லாம் ஏற்கனவே வலைப்பதிவுகளாக எழுதப்பட ஆரம்பித்துவிட்டன. இந்த நிலையில் இன்னும் காலம் செல்லச் செல்ல இன்னும் தெளிவு பிறக்கும். அப்போது இந்தக் கேள்வியே தேவையில்லாமல் போய்விடலாம் என்பது என் அனுமானம்.

ஆனால் அதற்காக குழுமங்கள் அழிந்துவிடும் என்று தோன்றவில்லை. சில தொடர் இழைகள் குழுமங்களில் நீளும் அளவுக்கு வலைப்பதிவுகளில் இருக்காமல் போகலாம். குழுமங்கள் ஓரளவுக்கு அறிமுகமான வட்டத்துக்குள் இயங்குவதால் அவற்றில் ஒரு பிணைப்பு, பந்தம் இருக்கும். அதற்காகவும் குழுமங்கள் பேணப்படும். அவற்றில் மடல்களின் எண்ணிக்கை குறையலாம். ஆனால் அவை இருந்துகொண்டுதான் இருக்கும். அவற்றில் சில இன்னும் யுனிகோடைத்தாங்கி html பக்கங்களைக் கையாளும் மன்றவகைகளாக (Forums) பரிணமிக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

 3. தமிழ்மணம் முழுக்க முழுக்க தங்களுடைய ஆர்வத்தினாலும், தமிழ்ப்பதிவர்களை  ஊக்குவிப்பதற்காகவும் உருவானது. அந்த ஈடுபாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்  செல்லும் திட்டங்கள் என்ன?

சொல்லிவிட்டு செய்யாமல் இருப்பதைவிட, சொல்லாமல் விட்டுவிட்டு செய்துவிடுவதே நல்லது இல்லையா? எனவே வசதியும், நேரமும் கைகொடுக்கும் வரை தொடர்ந்து அனைவருக்கும் பயனாகும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டே வரும் என்பதைத்தவிர இப்போது வேறு எதையும் சொல்லமுடியவில்லை.

 4. கூகிள், லீனக்ஸ் போன்றவை பெரும்பாலும் இலவசமாக இருந்தாலும்,  அவற்றைச் சுற்றி பொருளாதாரம் அமைந்திருக்கிறது. தமிழ்மணம் அவ்வாறு பணம்  ஈட்டும் திட்டம் உள்ளதா?

இப்போதைக்கு பணம் ஈட்டும் திட்டம் எதுவும் இல்லை. இதில் அந்த அளவுக்கு வருமானம் வர வாய்ப்பிருகிறதா என்ன, தனிமடலில் சொல்லுங்கள், உங்களை பாகஸ்தராக்கிவிடலாம் தளத்தை நடத்தத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கே பற்றாக்குறை வரும்போது அதை ஈடுகட்டத் தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். தனி ஒருவரின் பொருளையும் நேரத்தையும் இதில் கணக்கில்லாமல் கொட்டமுடியாது அல்லவா (அவர் புரவலரல்லாமல், வெறும் ஆர்வலராக இருக்கும்பட்சத்தில்)

 5. முழுக்க முழுக்க தன்னார்வலர்களின் மூலமே இணையத்தில் தமிழ் வளர்க்க  முடியுமா? லாபநோக்கில் நிறுவனங்கள் எந்தப் பகுதிகளில் ஈடுபட  ஆரம்பிக்கும்? எவ்வாறு?

என் அனுபவத்துக்கு இதெல்லாம் பெரிய பெரிய விஷயங்கள். இடம் மாறிக் கேட்கப்பட்டுவிட்டன.

 6. தங்களுக்கு ஆதர்ச நாயகர்கள் இருக்கிறார்களா? தங்களின் தற்போதைய ரோல்  மாடல் யார்?

அடிப்படையில் நான் ஒரு பொறியாளன். அப்படி சொல்லிக்கொள்வதில் வேறு எப்படி சொல்லிக்கொள்வதையும்விட நிறைவுகாண்பவன். எனவே என் ஆதர்ச நாயகர்கள் பொறியாளர்களே. புகழ்பெற்ற ஹென்றி போர்டில் இருந்து, தாமஸ் ஆல்வ எடிசனிலிருந்து இந்த உலகம் மேம்பட தினமும் உழைக்கும் பெயர் தெரியாத பொறியாளர்கள்வரை எல்லாருமே என் ஆதர்ச நாயகர்கள்தான். குறிப்பாக சொன்னால் கோவையில் நான் முன்பு பணிபுரிந்த நிறுவனத்தலைவர் திரு. ராமசாமி அவர்களைச் சொல்லலாம். அவரிடம் கூடவே இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் தமிழ்மணம் தள வடிவமைப்பு, செயலாக்கம் ஆகியவற்றிலும்கூட வெளிப்பட்டிருக்கின்றன. அவர் மென்கலன் நிறுவனம் நடத்தவில்லை, ஆனால் எந்த பொருள் அல்லது சேவைக்கும் பொதுவான சில குணாதிசயங்கள், எந்த செயல்திட்டத்துக்கும் பொதுவான சில அம்சங்கள் உள்ளன. அவற்றை முடிந்த வரையில் உணர்ந்து செயல்படுத்துவதே பொறியாளனின் முக்கிய பணி.

 7. இணையத்தில் தமிழ் எப்படி இருக்கிறது? படிப்பதற்கு திருப்தியாக  இருக்கிறதா? எந்தத் தளங்களை விரும்புகிறீர்கள்? எங்கு பின்தங்கி  இருக்கிறது?

என் தமிழ் இணைய அனுபவம் ஒருவருடத்துக்கும் சற்று கூடுதல், அவ்வளவே. எனவே இந்த மாதிரிக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி என் அறியாமையைப் பறை சாற்றிக்கொள்ள விரும்பவில்லை.

 8. ஏன் ஒருங்குறிமுறை (யூனிகோட்) பெரிய விஷயம்? எவ்வாறு அது தமிழை  முன்னெடுத்துச் செல்கிறது? டாப்/டாம் மற்றும் டிஸ்கியில் ஒன்றை தேர்ந்தெடுத்து  பரவலாக்காமல், யூனிகோட் நுழைந்தது எப்படி?

இதற்கும் பல ஜாம்பவான்கள் ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறார்கள். யுனிக்கோடைப் பற்றி பாமரன் பாணியில் நான் எழுதிய கட்டுரைத்தொடரிலும் சொல்லியிருக்கிறேன். இருந்தாலும் சிலவற்றை மறுஉறுதிப்படுத்த இங்கு சொல்கிறேன். டாப்/டாம் மற்றும் டிஸ்கியில் இல்லாத யுனிகோடின் முக்கியமான பயன்கள்:
  1. கூகிளில் யுனிகோடு தமிழில் தேடினால் தமிழில் எழுதப்பட்டவை மட்டும் விடைகளாகக் கிடைக்கும். மற்றவற்றில் இதுசாத்தியமில்லை.
  2. விண்டோஸ் எக்ஸ்பி தொடக்கம், யுனிகோடு எழுத்துரு கணினியுடன் ஏற்கனவே நிறுவப்பட்டு வருவதால் உடனடியாக பரவலாக தமிழ்கையாளமுடிகிறது. மற்றவற்றில் ஒருவர் எழுத்துருவை இறக்கி நிறுவியாகவேண்டும். எல்லா இடங்களிலும் இது சாத்தியமில்லை.
  3. மற்ற மொழிகளோடு ஒத்து உறையும் தன்மை. ஒரு கோப்பு எத்தனை கணினிகள் வழியாகப் பயணித்தாலும் அதன் உள்ளடக்கம் மாறாது. மற்றவை தனக்கு உரிமையில்லாத இடத்தில் உறைவதால் இந்த வசதி அவற்றுக்கு இல்லை.
பயன்களோடு இதற்கு சில விலையும் கொடுக்கிறோம். எது சரி எதுசரியில்லை என்பதை நான் சொல்ல முடியாது. ஆனால் யுனிகோடு பரவும் வேகத்தில் இனி இந்தக் கேள்வி காணாமல் போய்விடும் என்று தோன்றுகிறது.

 9. இணையத்தமிழின் வாசகர்கள் எப்படி இருக்கிறார்கள்? நிஜமாகவே ஆழ்ந்து  அலசி படிக்கிறார்களா? அல்லது தலைப்பு நுனிப்புல் மேய்ந்துவிட்டுப்  பறந்துவிடுகிறார்களா?

நானே பெரிய தமிழ் 'வாசகன்' அல்லன். கதை, கவிதை, நாவல் வாசிப்பவர்தான் வாசகர் என்ற (எனக்கு அவ்வளவாக ஒப்புமையில்லாத) வரையறை இங்கு இருப்பதாக உணர்கிறேன். எனவே எனக்கு பதில் சொல்லத்தெரியவில்லை.

 10. கொஞ்சம் பெர்சனல்  தங்களின் குடும்பம் குறித்துப் பகிர்ந்து கொள்ள  முடியுமா? தங்களுடைய குடும்ப நேரத்துக்கும், தமிழுக்கான நேரத்தையும் எப்படி  சமாளிக்கிறீர்கள்? நேர நிர்வாகம் குறித்து என்னைப் போன்று சிண்டைப்  பிய்த்துக் கொள்ளும் வலைஞர்களுக்கு டிப்ஸ் கொடுங்க 

என் குடும்பம் சாதாரண உழைப்பாளி குடும்பம்தான். இல்லத்தரசியும் இரண்டு குழந்தைகளும். நேர நிர்வாகத்தில் நான் பெரிய புலியெல்லாம் இல்லை. ஒன்றில் ஆர்வம் வந்துவிட்டால் அதில் மூழ்கிப்போய்விடுவேன். நானே நேரநிர்வாகத்தில் உங்களிடம் டிப்ஸ் கேட்கவேண்டும் இன்னும் முக்கியமான வேலையையெல்லாம் ஊறப்போட்டு மனைவியிடம் பாட்டு வாங்குபவன்தான்.

 11. தாங்கள் கணினியில் ப்ரொக்ராம் செய்பவர் அல்ல. தமிழ்மணத்திற்கு  முன்பு நிரலிகள் எழுதியது உண்டா? எந்த (computer) மொழியைக்  கையாளுகிறீர்கள்? இந்த அனுபவங்கள் தங்கள் தொழில் தடத்தை  மாற்றியமைக்குமா?

நான் தொழில்முறையில் கணினியில் மென்பொருள் எழுதுபவனல்ல. அதாவது வேறு ஒருவருக்காக, தேவைகளை கேட்டு, எழுதிக்கொடுத்தல் நான் செய்ததில்லை. ஆனால் அதற்காக ப்ரோகிராம் எழுதியதே இல்லை என்று அர்த்தமில்லை. என் (அலுவலக) சொந்த தேவைகளுக்காக பல மொழிகளில் சிறு நிரல்கள் எழுதுவேன். ஆனாலும் இடையில் ஒரு 7 ஆண்டுகள் என் பணியில் சுத்தமாக எழுதாமல் இருந்தேன். மீண்டும் இப்போது செய்யும் பணியில் அவ்வப்போது எழுதுவேன். அலுவலகத்தில் நான் பயன்படுத்தும் மொழிகள் வேறு, அவற்றை குறிப்பிட்ட மென்கலனுக்கு வெளியே கேள்விப்பட்டே இருக்கமுடியாது.

தமிழ்மணம் தளத்தை அமைக்க PHP என்னும் மொழியைக் கற்றேன். இயங்கு வலைப்பக்கங்களைக் (dynamic webpages) கொண்டு அமையும் இணையத்தளங்களை இந்த மொழியைக்கொண்டு சிறப்பாகக் கையாளமுடிகிறது. அத்துடன் திறமூல (Opensource) இயக்கங்கள் இந்த மொழியில் நிறைய நிரல் தொகுப்புக்களை பலரும் இலவசமாகப் பயன்படுத்த அளிக்கின்றன. தமிழ்மணம் தளத்தில் செய்தியோடை திரட்டும் வேலை அப்படிக் கிடைத்த ஒரு இலவச நிரல்தொகுப்பின் மூலமே செய்யப்படுகிறது.

நல்ல சமயத்தில் கேட்டீர்கள். உண்மையிலேயே நான் இப்போது கற்றுக்கொண்ட(கொண்டிருக்கும்) PHP மொழியறிவு என் அலுவலகத்திலும் பயனாக ஆரம்பித்துவிட்டது. புதிதாக நான் இறங்கிய ஒரு வேலையில் இரு சாத்தியங்கள் இருந்தன: சி++/ஜாவா போன்ற மேசைத்தளத்தில் நிறுவக்கூடிய கருவியாக செய்வது ஒன்று. ஒரு வழங்கியில் நிறுவப்பட்டு இணைய உலாவி வழியாக இயங்கும் கருவியாக செய்வது ஒன்று. இதுவே போன வருடமாக இருந்தால் இரண்டாவது வழியின் அடிப்படைக்கூறுகளே பிடிபட்டிருக்காது. முதல் வழியில் நான் இன்னொருவரின் உதவியை நாடவேண்டியிருந்திருக்கும். இன்று தமிழ்மணம் மூலம் கிடைத்த அனுபவம் எனக்கு இரண்டாவது வழியின் அனுகூலங்களை உணரச்செய்ததோடு, பிறர் உதவியின்றி நானே செய்யவும் வகைசெய்தது. ஆக வலைப்பதிவுகளில் ஈடுபடுவது வெறும் பொழுதுபோக்கில்லை, எழுத்தாளராக இருந்தால் எழுத்து வளம்பெறும், பொறியாளராக இருந்தால் கருவிகள் கூர்மைப்படும். மேலாளராக இருந்தால் தகவல்மேலாண்மைவின் வீச்சும் வீரியமும் புலப்படும்.

 12. நயாகரா அருகில் இருக்கிறீர்கள். எத்தனை முறை நயாகரா  சென்றிருக்கிறீர்கள்? அலுத்து விட்டதா?

ஒரு ஆறேழு முறை சென்றிருப்பேன். ஆமாம் அலுத்துவிட்டது. எவ்வளவுதான் நயாகரா பெரிய அருவியானாலும், நம் ஊரில் மலை இடுக்குகளில் வழிந்துவரும் சிறு அருவிகளில் விழுந்து புரண்டு அடையும் ஆனந்தத்துக்கு அருகில் கூட வரமுடியாது. கோவையில் இருக்கும்வரை இம்மாதிரி நீரோடைகளுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வோம். எனக்கு அதுதான் மிகவும் பிடிக்கும்.

13. பின்னூட்டங்கள் தங்கள் பதிவுகளின் உள்ளடக்கத்தையும், எண்ணிக்கையையும்  எவ்வாறு பாதிக்கிறது?

பின்னூட்டங்கள் கட்டாயம் முக்கியமானவை. அதிலும் ஆரம்ப நிலையில் இருக்கும் வலைப்பதிவர்களுக்கு இவையே தொடர்ந்து எழுத ஆர்வத்தைத் தருகின்றன. காலப் போக்கில் 'உடனடிப் பின்னூட்டங்கள் இல்லாவிட்டாலும் பலநாட்கள் கழித்தும் வாசிக்கப்படுபவை வலைப்பதிவுகள், வாசிப்பவர் அனைவரும் பின்னூட்டமிடமாட்டார்கள்' என்றதெல்லாம் புரிய ஆரம்பித்ததும் இவற்றிற்கான எதிர்பார்ப்புக் குறையும். குறிப்பாக தினசரி நடப்புகளைப் பற்றி சுவாரசியமாக எழுதுபவர்கள் பின்னூட்டமில்லாவிட்டால் அதிகம் சோர்வடைய வாய்ப்பிருக்கிறது. என் வலைப்பதிவை எடுத்துக்கொண்டால் நான் பல வலைப்பதிவுகளை வாசித்துப் பின்னூட்டமிடுவதனாலோ என்னவோ நண்பர்கள் பின்னூட்டத்தின்மூலம் நன்றாகவே ஊக்குவித்திருக்கிறார்கள். வெறுமனே ஊக்குவிக்கமட்டும் என்றில்லாமல் விட்டுப்போனவற்றை இட்டு நிரப்புதல், தவறுகளை சுட்டிக்காட்டுதல் என்று பங்களிக்கும் பின்னூட்டங்கள் இன்னும் அதிகம் வரவேண்டும். ஆனால் கருத்தைத் திசைமாற்றி நேரத்தையும் ஆர்வத்தையும் விரயமாக்கும் ஊசிப்போன வறட்டு விவாதங்கள் குறையவேண்டும்.

 14. திருக்குறள், கம்பியில்லா வலைப்பின்னல் போன்ற பல முக்கிய ஆக்கங்கள்  கொடுத்திருக்கிறீர்கள். இவற்றை தொகுத்து புத்தகமாக்கும் எண்ணங்கள்  இருக்கிறதா?

(கேலியில்லையே!) கம்பியில்லா வலைப்பின்னல் ஒரு சோதனை முயற்சி. அது நாளும் மாறிக்கொண்டேயிருக்கும் துறை. நானும் அதில் கரை கண்டவனில்லை. எனவே புத்தகம் போட அதற்குத் தகுதி இருப்பதாக எண்ணவில்லை. திருக்குறளைப்பற்றி ஏதோ இரண்டு கட்டுரை எழுதினேன். அவ்வளவுதான். புத்தகம் போடுமளவுக்கு இன்னும் எழுதவில்லை. எதாவது ஒரு தலைப்பில் ஆழ்ந்து எழுதும்போது பார்க்கலாம்.

 15. தங்களின் எழுத்தார்வம் எவ்வாறு இருக்கிறது? வலைப்பதிவின் மூலம் எந்தத்  தலைப்புகளில் விரிவாக கட்டுரை எழுத விருப்பம்?

பொதுவாக எனக்கு தொழில்நுட்பம்/சமூகவியல் சார்ந்த கட்டுரைகள் எழுதத்தான் ஆர்வம். புனைவுஆக்கங்கள் பக்கமே போகமாட்டேன், அவற்றை வாசிப்பதே கூட குறைவுதான். பெரிய திட்டம் எதுவும் இல்லை. பார்க்கலாம்.

 16. நீங்கள் வலைப்பதிவில் கண்ட அதிசய பழக்கவழக்கம் என்ன?

பலரும் ஆர்வமாக ஆரம்பித்து ஓரிரு பத்திகள் எழுதிய 'உடனே பின்னூட்டத்தில் சொல்லுங்கள் மேலே எழுதுவேன்' என்கிறார்கள். அதுதான் ஆச்சரியமாக இருக்கும். என்னவோ பின்னூட்டமிடுவதே கடமையென சிலர் இவர்களுக்காக காத்திருப்பதுபோல! எழுத ஆர்வமிருந்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம். நன்றாக இருந்தால் கட்டாயம் வாசிப்பார்கள், இல்லாவிட்டால் யோசிப்பார்கள். அவசரப்படக்கூடாது.

 17. சன் டிவி பேட்டிகளின் மூலம் ஒரு கெட்ட பழக்கவழக்கம் என்னைத்  தொற்றிக் கொண்டுள்ளது. ஏழு வயதில் தேசிய விருது வாங்கிய குழந்தை  நட்சத்திரத்திடம் பேட்டி முடியும் சமயத்தில், 'உங்கள் நேயர்களுக்கு என்ன  சொல்ல விரும்புகிறீர்கள்?' என்று கேட்பார்கள்.  உங்களிடம் இதைக் கேட்பது பொருத்தம்; என்னுடைய கேள்வி கேட்கும்  பற்றாக்குறையையும் தீர்க்கும். தமிழ் வலை வாசகர்களுக்கு என்ன குறிப்பிட  நினைக்கிறீர்கள்?

ஏழுவயதே ஆனாலும் தேசியவிருது வாங்கியவர்களைத்தானே கேட்கிறார்கள், என்னை ஏன் அவர்களோடு சேர்க்கிறீர்கள்? மன்னிக்கவும், வாசகர்களுக்கு செய்தி சொல்லும் அளவுக்கு என்னிடம் ஒன்றுமில்லை, வேண்டுமானால் தமிழோவியத்தோடு சேர்ந்து அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன். நன்றி.

No comments:

Post a Comment

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)