

சிப்பியிலிருக்கும் முத்தைப் போல
டைரியின் வடிவில்
பரண் மீது தூசியுடன்
இன்னும் இருந்தது
என் நினைவுகளும் அவள் காதலும்.
முதல் வேலையாக அவளைத்தேடி,
மளிகைக்கடை அண்ணாச்சிக்கு
வாக்கப்பட்டதாய் அம்மா சொன்னது
இன்னும் காதுகளில் ரீங்காரமிட்டது.
இளமை தொலைத்து,
உருவம் பெருத்து,
மளிகைக்கடையில் அவள்.
மனதுள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்,
கண்களில் பழைய காதலுடன்,
பேச முடியாமல் அவளையே பார்த்தபடி
ஊமையாய் நின்று கொண்டிருந்தேன்.
"என்னங்க வேணும்?" அவள்.
"என்னைத்தெரியுதா வசந்தி?" ஊற்றெடுத்த காதலுடன் கேட்டேன்.
"தெரியலையே"
"நாந்தான் மணியாக்கவுண்டர் பையன் சண்முகம்" என்றேன் புன்னகை வழிய.
"அட ஆமா, சரியா அடையாளம் தெரியல. என்னங்க வேணும்?"என்று கேட்டாள்
முகத்தில்
எந்த சலனமும் இல்லாமல்,
தொழிலை மனதில் வைத்த
அந்த மளிகைக்கடைக்காரி.
"ஒன்றும் வேண்டாம்" என்று நடையைக்கட்டினேன் வீட்டை நோக்கி.
விடியற்காலை,
தண்ணிக்காக மூட்டிய அடுப்பில்,
அந்த டைரியையும்,
அவள் நினைவுகளையும்
திணித்துவிட்டு
நிம்மதியாய் என் வாரிசை
அணைத்து முத்தமிட்டேன்!
No comments:
Post a Comment