அவுங்க வீட்டுல நாங்க ரெண்டு வருசம் வாடகைக்கு குடியிருந்தோம். அதாவது 9,10 படிக்கிற நேரத்துல. அந்த காலகட்டம் எல்லாருக்குமே வாழ்க்கையின் படிக்கட்டு. அந்தச் சமயத்துல அவுங்க வீட்டில இருந்ததுதான் என்னோட மொத படிக்கட்டா ஆனது. மாமாவும் அத்தையும் படின்னு சொல்றது ஒன்னும் புதிசா இல்லை. ஏன்னா எல்லாரும் சொல்றதுதானே. ஆனா, அந்த ரெண்டு வருசத்துல அவுங்க சொல்லிக்குடுத்தது வாழ்க்கையின் பாடத்தைப் பத்தி. மரியாதை, குடும்ப சூழல்க்கு தகுந்தபடி வாழ்றது, வாழ்க்கைய எப்படி அமைச்சிக்கிறது இதெல்லாம்தான். எங்க வீட்டுல இதை எல்லாம் சொல்லி இருந்தா கண்டுக்காம விட்டிருப்பேன். ஆனா அவுங்க ரெண்டு பேரும் சொன்ன விதம், பசுமரத்தாணியாட்டம் நின்னுருச்சு.
வாழ்கையின் சக்கரத்துல எல்லாரும் சிதறித்தான் போனோம். மாமா வீட்டுக்கும் எங்களுக்குமான தொடர்புக்கான தொலைவு அதிகமாச்சு. ஆனாலும் மாமா பையன் கூட கடைசி வரைக்கும் அதே பாசம் இருந்துச்சு, மூத்தவர்னாலும் ஒரே செட்டாகிட்டோம். மாமாவுக்கு செல்வாக்கு ரொம்ப அதிகம், பணமும் கைநிறைய, அதனால மாமா பையன் தொழில்ல இறங்கினது ஒன்னும் பெருசாத் தெரியல.
போன மாசம் ஒரு நாள் அம்மாகிட்ட ஒரு போன், "இஞ்சினியர் மாமா இறந்துட்டாருடா, மாரடைப்பாம்". அதுக்குமேல எனக்கு பேச ஒன்னுமேஇல்லை. சிலரோட இழப்புக்கு யார் தோள் மேலயாவது சாய்ஞ்சு அழுனும் தோணும், சிலரோடதுக்கு கதறி அழனும்னு தோணும். ஆனா, மாமாவோட இழப்புக்கு எனக்கும் எதுவுமே பேசத்தோணலை. ஒரு நாள் முழுக்க பிரமை பிடிச்ச மாதிரியே அலுவலகத்துல இருந்தேன். எந்த வேலையும் பார்க்கலை. ஏன், அத்தை வீட்டுக்கு பேசனும்னு கூடத் தோணலை. ஒரு வாரம் இப்படியே விரக்தியாவே கடந்தது.
ஐயோ, அத்தையின் அந்த கம்பீரம் தொலைச்ச முகத்தையும், தகப்பனை இழந்த மாமா பையனின் சோக முகத்தையும் எப்படி பார்ப்பேன்? அவுங்க வீட்டுக்கு போனா "மாப்ளே"ன்னு சொல்ற சிம்மாசனக் குரல், இதெல்லாம் இனிமே கிடைக்குமா?.. என்ன செய்ய முடியும்? மாமவோட கால புடிச்சி அழ வேண்டிய நேரத்துல எங்கோ ஒரு தேசத்துல இருந்துகிட்டு இப்படி வேதனைப் படுறது எவ்வளவு பெரிய சோகம், சாபம்? இந்த மாதிரி சமயங்கள்லதான் அயல்நாட்டு வாழ்க்கை மேல ஒரு வெறுப்பு வருது.
மாமாவின் ஞாபகங்கள் நிறைய நினைச்சுப் பார்க்கிறேன், அவர் சொன்ன விசயங்கள், வாழ்க்கையில அந்த காலத்துல படிச்சு முன்னேறுன வைராக்கியம், சாதாரண நிலைமையில இருந்து இன்னிக்கு ஊருல ஒரு பெரிய நிலைமைக்கு வர காரணமா இருந்த அவரோட உழைப்பு, எதையுமே சாதாரணமா நினைக்கிற குணம் இதெல்லாம் யாருக்கு வரும். எங்களை எல்லாம் விட்டு போக வேண்டிய வயசா இது? இந்தப் பதிவு போடும் போது மட்டுமே ரெண்டு முறை அழுதிருக்கேன். சில பிரிவுகளை மனசு ஏத்துக்காது, மறக்காது. அது மாதிரிதான் மாமாவின் பிரிவும். உங்க ஆத்மா சாந்தியடைட்டும் மாமா!







